ஜெயிச்ச அடுத்த நாளே விஜய் ஆட்சி அமைச்சு இருப்பார்.. காங்கிரசுக்கு தான் நன்றி.. திமுகவினர் கிண்டல்
சென்னை: நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தவெகவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் ஜெயித்த மறுநாளே பதவியேற்று இருப்பார்.. இவ்வளவுநாள் இழுபறிக்கு காங்கிரசுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று திமுகவினர் சிலர் கிண்டல் செய்து வீடியோ பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்தது.இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டன. இந்த எண்ணிக்கையில் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 தொகுதிகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தார் .

அதேபோல் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 73 இடங்களை தேர்தலில் வென்றிருந்தது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் விஜய்க்கு கிடைக்கவில்லை. விஜய் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் தனியாகபோய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தால் அனுமதி கொடுத்திருப்பார். மாறாக விஜய், கூட்டணி ஆட்சி என்று காங்கிரஸ் பட்டியலையும் வழங்கியதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் திடீரென்று விலகி த.வெ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததுடன், ஆட்சிக்கு ஆதரவும் கொடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால், த.வெ.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது. 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தது. நேற்று இடதுசாரிகள் தவெகவிற்கு ஆதரவு கடிதம் தந்துவிட்டார்கள். அந்த ஆதரவு கடிதத்துடன் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் அனுமதிக்கவில்லை.. ஏனெனில் விஜய்க்கு 116 இடங்கள் இருந்தது 117 என்கிற மேஜிக் இல்லாத காரணத்தால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மறுபக்கம் திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வென்றிருந்தது. பாமக 4 இடங்கள், அமமுக ஒரு இடம், தேமுதிக ஒரு இடம், விசிக இரண்டு இடம், ஐயுஎம்எல் இரண்டு இடம் என 116 பேர் எதிர்ப்பில் இருந்தனர். இதில் விசிக மட்டுமே ஆதரவு நிலைப்பாடு எடுக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று விசிக, ஐயுஎம்எல் என இருகட்சிகள் தலா 2 இடங்களுக்கான ஆதரவு கடிதத்தை விஜய்க்கு தந்துள்ளன. நீண்ட இழுபறிக்கு பின்னர் விஜய்க்கு கிடைத்துள்ளது.
ஆனாலும் இன்னும் விஜய் ஆட்சியமைக்க முடியாத நிலையில் இருக்கிறார். ஏனெனில் இத்தனை நாளாக நேரம் கொடுத்த ஆளுநர்,இன்று மாலை திருவனந்தபுரம் செல்வதால் நேரம் கொடுக்கவில்லை.. இனி அவர் நேரம் கொடுத்தால் மட்டுமே விஜய் சந்திக்க முடியும். அதன்பிறகே ஆட்சியமைக்க உரிமை கோர முடியும் என்கிற நிலை இருந்தது. இதனால் விஜய் பதவியேற்பது மீண்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. எனினும் நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்பது உறுதி என்கிறார்கள். இதனை கிண்டல் செய்த திமுகவினர், தவெக தலைவர் விஜய் ஜெயித்த மறுநாளே பதவியேற்று இருப்பார்.. இவ்வளவுநாள் இழுபறிக்கு காங்கிரசுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். காங்கிரஸ் கொடுத்த ஆதரவு மற்றும் அந்த பட்டியலை ஆளுநரிடம் விஜய் காட்டியதுமே தாமதத்திற்கு காரணம் என்று கிண்டல் செய்கிறார்கள்.













Click it and Unblock the Notifications