கர்நாடகா பாணி ஆட்சி கவிழ்ப்பு- தமிழகத்தில் திமுக தயங்குகிறதா? பதுங்கி பாயப் போகிறதா?
Recommended Video
சென்னை: கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசை கவிழ்த்த விவகாரத்தில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக மவுனம் சாதித்து வருவது பல்வேறு விவாதங்களை எழுப்பி வருகிறது.
தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை கலைத்துவிட்டு கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்றமாட்டோம் என்பது திமுகவின் நிலைப்பாடு. அத்துடன் தற்போதைய சீர்கேடான ஆட்சியின் அவலங்களை சீரமைக்கவே பதவி காலம் போதாது என்பதால் அமைதியாக இருக்கிறோம் என்பதும் திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்து.
ஆனால் அதிமுக அரசை திமுக எப்படியும் கலைத்துவிடும் என்பது அக்கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலில் அதிமுக அரசின் எதிர்காலம் குறித்து ஸ்டாலின் பேசிவருவது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக விவகாரத்தில் திமுக மவுனம்
இந்நிலையில் கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்தது பற்றி திமுக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதுவும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டுள்ள நிலையில் திமுகவின் கருத்து எதுவும் வெளியாகவில்லை. இதுதான் தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.

திமுக தயங்க இதுதான் காரணம்
ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசை கவிழ்த்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்துவிட்டால் அதை ஜனநாயகப் படுகொலை என விமர்சித்தால் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை ஒருவேளை திமுக கவிழ்த்தால் அதே விமர்சனம் தங்களுக்கு பொருந்திவிடுமே என்கிற தயக்கம் முதல் காரணம். 2-வதாக கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வரமாட்டோம்; பொதுத்தேர்தல் மூலமாக 200க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி வலிமையான ஆட்சியை அம்மைப்போம் என்கிற கருத்துக்கு முரணாகிவிடும் என்கிற மற்றொரு தயக்கம்.

ஜனநாயகப் படுகொலை அல்ல
இதை ஒருபக்கம் ஏற்றுக் கொண்டாலும் இன்னொரு பக்கம் திமுக மூத்த தலைவர்களோ, கர்நாடகா ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசு, ஜனநாயக படுகொலைகளை எதுவும் செய்யவில்லை. ஆனால் தமிழகத்தில் அதிமுக அரசு, ஆளுநரிடம் மனு கொடுத்த ஒற்றை காரணத்துக்காக 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. அடுத்தது கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 எம்.எல்.ஏக்களை தங்களுடன் வைத்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை. இப்படி ஜனநாயகத்தை பற்றியே கவலைப்படாத ஒரு அரசை கவிழ்ப்பதால் மக்கள் வெறுப்படைய மாட்டார்கள்; மகிழ்ச்சி அடைவார்கள் என்பது அவர்களது வாதம்.

கேள்விக்குள்ளாகும் ஸ்டாலின் ஆளுமை
அதிமுக அரசு விஷயத்தில் திமுக ஒருபக்கம் தயங்கிக் கொண்டிருக்கிறது... இன்னொரு பக்கம் பதுங்கிக் கொண்டிருக்கிறது.. இந்த ஊசலாட்ட நிலை தொடர்ந்து நீடிப்பதும் கூட திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் ஆளுமையை கேள்விக்குறியாக்க கூடும் எனவும் எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications