திமுக இளைஞரணி துணை செயலர் பதவி- வாரிசுகளுக்காக மல்லுக்கட்டும் டி.ஆர். பாலு- கே.என்.நேரு
சென்னை: திமுகவின் தலைமை கழக பொறுப்புகளுக்கு முட்டி மோதும் சீனியர்கள் அப்படியே வாரிசுகளுக்கான பதவிகளுக்கும் மல்லட்டுக்கட்டுவது தொடர் கதையாகி வருகிறது.
திமுகவின் அடுத்த பொதுச்செயலராக துரைமுருகனுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் அவரிடம் உள்ள பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு உள்ளிட்டோர் பெயர் அடிபடுகிறது.
டி.ஆர். பாலுவிடம் இருந்த முதன்மைச் செயலர் பதவி திருச்சி. கே.என். நேருவுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் சீனியாரிட்டி படி தமக்கே பொருளாளர் பதவி கிடைக்கும் என நினைக்கிறது டி.ஆர். பாலு தரப்பு.
இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்க, திமுக இளைஞரணி துணைச் செயலர் பதவி யாருக்கு என்பது குறித்த விவாதம் அன்பகம் வட்டாரங்கள் தலைதூக்கியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் வலது கரமான அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ., திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களில் ஒருவராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.
திமுக பொதுச்செயலாளராகும் துரைமுருகன்... பொருளாளர் பதவிக்கு குறிவைக்கும் எ.வ. வேலு
அன்பில் மகேஷ் வசம் இருந்த இளைஞர் அணி துணை செயலாளர் பதவி யாருக்கு என்பதில் முட்டி மோதுகின்றனர் இரண்டு சீனியர்கள். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் .பாலு, மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்காக இளைஞரணி துணை செயலர் பதவியை பெற போராடுகிறார்.
இன்னொரு பக்கம் திருச்சி அரசியலில் தமது கை எப்போதும் ஓங்கியே இருக்க வேண்டும் என்பதற்காக கே.என்.நேரு, மகன் அருணுக்காக முட்டி மோதுகிறாராம். ஆனால் உதயநிதிக்கு வலதும் இடதுமாக இருப்பவர்கள் திருச்சி கே.என். நேருவின் கால்நூற்றாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது; இனி அவர் திருச்சி திமுகவில் தலை எடுத்துவிடக் கூடாது என்பதில் படுதீவிரமாக இருக்கின்றனராம்.
இதனால் இந்த ரேசில் டி.ஆர்.பி. ராஜாதான் தற்போதைய நிலையில் முந்துகிறாராம். அவருக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கின்றன இளைஞர் அணியின் அன்பகம் வட்டாரங்கள்.