'75 நாள் ஆச்சு..' திமுக அரசு இன்னும் இந்த முக்கிய திட்டத்தை அறிவிக்காதது ஏமாற்றமே.. கமல் சாடல்
சென்னை: திமுக ஆட்சியில் அமர்ந்த 75 நாட்கள் ஆகியும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வங்கும் திட்டத்தை அறிவிக்காதது ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ள கமல், இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழும் இந்த விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல என்றும் சாடியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் சமயத்தில் திமுக முன் வைத்த வாக்குறுதிகளில் முக்கியமானது குடும்பத் தலைவிகளுக்கு மாத உரிமை தொகை திட்டம். தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்தது.
மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்
இந்நிலையில், திமுக ஆட்சியில் அமர்ந்த 75 நாட்கள் ஆகியும் இந்த திட்டத்தை அறிவிக்காதது ஏமாற்றமளிப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
கமல் அறிக்கை
இது குறித்து மக்கள் நீதி மைய தலைவர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை, இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை முதன் முதலில் முன்வைத்த அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம்.
குடும்பத் தலைவிகள்
குடும்பத் தலைவிகள் பொருளாதாரத்திற்குக் கணவனைச் சார்ந்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. தங்களது தனிப்பட்ட ஆர்வம், கனவுகளுக்காக அவர்களால் செலவு செய்ய முடியாத நிலையில் தான் பெரும்பான்மையான பெண்கள் உள்ளனர். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்பு பெண்களுக்கு மிகப் பெரிய பொருளாதார சுதந்திரத்தை அளிக்கக் கூடியது. வீட்டைப் பார்த்துக்கொள்ளும் குடும்பத்தலைவிகளின் உழைப்பின் மதிப்பு, கணவரின் அலுவலக வேலை மதிப்பைவிடக் குறைந்ததல்ல என்று உச்சநீதிமன்ற ஒரு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் திட்டம்
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பினை பார்த்துப் பிற அரசியல் கட்சிகளும் இதை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்து கொண்டன. தமிழகத்தில் துவங்கி அஸ்ஸாம் தேர்தல் வரை இது எதிரொலித்தது. திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த தொகை. இல்லத்தரசிகளுக்கு எதுவுமே இல்லாத நிலையில் இந்த சிறிய தொகையாவது அவர்களுக்குக் கிடைக்கிறதே என்று தான் கருதவேண்டியுள்ளது. ஒரு சிறு துவக்கம் என்கிற அளவில் மனதைத் தேற்றிக்கொள்ளலாம்.
75 நாட்கள்
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. சமூக நலத்திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழும் தமிழகம் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல.
கமல் வலியுறுத்தல்
திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் நிதிநிலை கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.