தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி பேச வேண்டும்? சென்னையில் மார்ச் 12ஆம் தேதி திமுக பேச்சாளர்கள் கூட்டம்!
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி பேச வேண்டும், என்னென்ன விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில், சென்னையில் மார்ச் 12ஆம் தேதி திமுக பேச்சாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு சொந்தமான ஹோட்டல் அக்கார்டில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் திமுக சொற்பொழிவாளர்கள் டிராவல் பேக், உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது கூடுதல் தகவலாகும்.

இதனிடையே இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் விடுத்த அறிவிப்பு வருமாறு;
''எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிட வேண்டிய நெறிமுறைகளை வகுத்திடும் "தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டம்" வருகிற 12-03-2024 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு சென்னை, தியாகராயநகர் நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள "ஓட்டல் அகார்டில்" நடைபெறுகிறது.''
''இதில் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் - மாநிலங்களவைக்குழுத் தலைவர் திருச்சி சிவா, எம்.பி., அவர்கள் தலைமையில், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., அவர்கள் வரவேற்புரையாற்றிட, கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிட இருக்கின்றார்கள். அழைப்பிதழ் வரப் பெற்றவர்கள் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.''
திமுகவை பொறுத்தவரை பேசி பேசியே வளர்ந்த கட்சி. திமுகவில் உள்ள தலைவர்கள் அனைவருக்கும் பேச்சு என்பது கைவந்தக் கலை. அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் தொடங்கி துரைமுருகன், சுப்பு, ரகுமான் கான் என பலரும் பேச்சால் புயலை கிளப்பும் அளவுக்கு சுவாரஸ்யமாக பேசக்கூடியவர்கள். அதேபோல் திமுக மேடைகளில் அதிரடிக்கு குறைவில்லாத வகையில், ஒரு காலத்தில் வெற்றிக்கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் என பலரும் பேசி வந்தனர்.
இப்போது கணினி, செல்போன், சமூக வலைதளங்கள் என வந்துவிட்டதால் பேச்சாளர்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். திமுக தலைமையும் கட்சி பேச்சாளர்களுக்கு சில நெறிமுறைகளை வகுத்து அதன்படி மட்டும் பேசுமாறும் யாரையும் தனிமனித தாக்குதலில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications