சென்னை ஐ.ஐ.டி முன்பு திரண்ட திமுக மாணவரணி.. மத்திய இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கு கருப்புக் கொடி!
சென்னை: சென்னை ஐ.ஐ.டி வாயிலில் இன்று மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் திமுக மாணவரணி மற்றும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஈடுபட்டனர். சென்னை ஐஐடி வந்த மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது என்றும், அதனால் தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்க முடியாது என்றும் கூறியிருந்தார். தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே ரூ.2152 கோடி கல்வி நிதியை விடுவிப்போம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களில் இறங்கியுள்ளன. திமுக மாணவர் அணி சார்பிலும், மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்பு முயற்சியைக் கண்டித்தும், கல்வி நிதி ஒதுக்க மறுப்பதைக் கண்டித்தும் திமுக மாணவர் அணி, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பின் சார்பிலும் கடந்த 25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னை வருகை தந்த மத்திய இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் திமுக மாணவரணி ஈடுபட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை ஐ.ஐ.டிக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டு உள்ளது.

"தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுத்து, இந்தியையும், தேசியக் கல்விக் கொள்கையையும் திணிக்க முனையும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையில் சென்னை, ஐ.ஐ.டி வாயிலில் பிப்ரவரி 28 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்." என திமுக மாணவரணி மற்றும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை சென்னை ஐ.ஐ.டி முன்பாக மாணவர்கள் கூட்டமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தித் திணிப்புக்கு எதிரான பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பினர், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்க உள்ளார். தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்க மறுத்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சென்னைக்கு வந்தால் அவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்படும் என்பதால் தான் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications