எம்ஜிஆருக்கு பிறகு ஸ்டாலின்தான்.. திமுகவினரை அசரவைத்து.. அதிமுகவினரை டென்சனாக்கிய பாஜக அரசக்குமார்
புதுக்கோட்டை: எம்ஜிஆருக்கு பிறகு ஸ்டாலின்தான் என திமுகவினரையே அசர வைத்த அரசக்குமார் அதிமுகவினரை டென்சனாக்கிவிட்டார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசுவின் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி. அரசக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி. அரசக்குமார் பேசினார். அவர் கூறுகையில் எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் என்றால் அவர் ஸ்டாலின்தான்.
பாஜகவின் அரசகுமார் நேர்மையாக பேசி இருக்கிறார்.. நன்றி.. புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்!
முதல்வராக ஸ்டாலின்
முதல்வர் இருக்கையை தட்டி பறிக்க நினைத்திருந்தால் கூவத்தூர் பிரச்சினையின் போதே ஸ்டாலின் முதல்வர் ஆகியிருப்பார். ஜனநாயக முறையில் முதல்வராக ஸ்டாலின் காத்திருக்கிறார்.
ஸ்டாலின் அரியணை
காலம் கனியும் காரியங்கள் தானாக நடக்கும். ஸ்டாலின் அரியணை ஏறுவார். நாம் அதை பார்ப்போம். என்றைக்கும் நிரந்தர தலைவராக இருப்பவர் ஸ்டாலின்தான் என்றார். அது போல் திமுக தலைவர் மறைந்த கருணாநிதி குறித்தும் புகழ்ந்து பேசினார்.
அரசக்குமார்
எம்ஜிஆருக்கு அடுத்தது ஸ்டாலின் என பாஜக தலைவர் ஒருவர் கூறுவார் என்பதை ஸ்டாலினின் தொண்டர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக இது போன்ற ஒரு கருத்தை கூறியதன் மூலம் திமுகவினரையே அரசக்குமார் அசர வைத்துவிட்டார்.
அதிமுகவினர் அதிருப்தி
அதே வேளையில் அதிமுகவினரின் அதிருப்தியையும் பாஜக வாங்கிக் கொண்டது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது. அது போல் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜக பிரமுகரின் பேச்சு கூட்டணி கட்சியான அதிமுக மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.