பழி போட்டு தப்பிப்பதை நிறுத்துங்க.. மக்களுக்கு உண்மை தெரிஞ்சா தாங்க மாட்டீங்க.. அண்ணாமலை பாய்ச்சல்!
சென்னை: நிர்வாகத் தோல்வியால் பொதுமக்களை இன்னலுக்கு உள்ளாக்கிவிட்டு, மத்திய அரசின் மீது பழிபோடும் போக்கை திமுக இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு உண்மை தெரியவரும்போது, அவர்கள் கோபத்தின் விளைவுகளை, திமுகவால் தாங்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து நிவாரண நிதி கேட்டு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும் நேரிலும் அவர் பிரதமர் மோடியை சந்தித்து நிவாரண நிதி வழங்க கோரிக்கை வைத்தார். தமிழக அரசு சார்பில் மொத்தம் 21 ஆயிரம் கோடி வரை நிவாரண நிதி கோரப்பட்டுள்ளது.

2023 - 24ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு ரூ.900 கோடியும், மாநில அரசு ரூ.300 கோடியும் என ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் நிவாரண நிதியாக ரூ.450 கோடி மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்நிலையில், பேரிடராக அறிவித்து, கூடுதல் நிதியை வழங்க வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் பேரிடராக அறிவிக்க முடியாது, அது நடைமுறை இல்லை எனத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, திமுக - பாஜக இடையே கருத்து யுத்தம் நிலவி வருகிறது.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிர்வாகத் தோல்வியை மறைக்க, காலங்காலமாய் திமுக பயன்படுத்தும், மத்திய அரசின் மீது பழிபோடும் துருப்பிடித்துப் போன யுக்தியை, மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால், இந்த முறை ஏமாற மக்கள் தயாராக இல்லை. சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரூபாய் 4,000 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொண்டு வந்ததாகக் கூறி வந்த திமுக, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு அமைச்சர், 70% பணிகள் நிறைவடைந்து விட்டன, 80% பணிகள் நிறைவடைந்து விட்டன என்று ஒவ்வொரு முறையும் கதை சொல்லி, இறுதியாக 98% பணிகள் நிறைவடைந்து விட்டன என்று பொதுமக்களை நம்ப வைத்திருந்தார்கள்.
மிக்ஜம் புயல் பாதிப்பில் சென்னை மிதந்தபோது, பொதுமக்களின் ஒரே கேள்வி, அந்த 4,000 கோடி என்ன ஆனது என்பதாகத் தான் இருந்தது. 4,000 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்ததால்தான் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறிவந்த முதலமைச்சர் வேறு வழியின்றி, அமைச்சர் கே.என். நேருவை
அனுப்பி, இதுவரை, ரூபாய் 2,191 கோடி மதிப்பில்தான் பணிகள் முடிவடைந்திருக்கின்றன. மொத்த பணிகளின் மதிப்பு ரூபாய் 5,166 கோடி என்று சமாளிக்க முயன்றார். நடைபெறாத பணிகளை, முழுவதும் முடித்து விட்டதாகக் கூறி, சென்னை மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க வைத்ததற்கு திமுக அரசே முழு பொறுப்பு.
அதுமட்டுமின்றி, மீதமிருக்கும் சுமார் 3,000 கோடி எங்கே என்பதை முதலமைச்சர் முதலில் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆராய்ச்சி மையம் ஐந்து நாட்களுக்கு முன்பாக இருந்து ஒவ்வொரு நாளும் தெரிவித்தும், எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்காமல் புறக்கணித்துவிட்டு, மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல், வானிலை மையத்தின் மீது குற்றம் சொல்கிறார் முதலமைச்சர்.
ஆட்சியில் இருப்பது திமுகவா அல்லது வானிலை ஆராய்ச்சி மையமா? கனமழை பெய்யும் என்று தெரிந்ததும், தென்மாவட்டங்களில் திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை பொதுமக்களுக்குக் கூறத் தயாரா? கனமழையாலும், வெள்ளத்தாலும் தென்மாவட்ட மக்கள் தத்தளித்துக்
கொண்டிருந்தபோது, 'இந்தியா' கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர் டெல்லி சென்றதும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார் என்பதே தெரியாமல், அவரை மீட்புப் பணிகளில் ஈடுபட நியமித்ததும், அவரை வெள்ளத்தில் இருந்து மீட்கவே மூன்று நாட்கள் ஆனதும் தான் திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பது மக்களுக்குத் தெரியாதா?
இந்த ஆண்டு தொடக்கத்தில், கடந்த ஆண்டு மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிவாரண நிதி கையிருப்பு ரூபாய் 813 கோடி, இந்த ஆண்டுக்கான முதல் தவணை ரூபாய் 450 கோடி என்று ஏற்கனவே தமிழக அரசிடம் ரூபாய் 1,263 கோடி கையிருப்பு இருக்கிறது. அதற்கு மேல், இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணை ரூபாய் 450 கோடியையும், மிக்ஜாம் புயல் தாக்கிய அடுத்த தினமே மத்திய அரசு வழங்கியது. இழப்பீடு குறித்த ஆய்வுப் பணிகளுக்காக, மத்தியக் குழுவினரும் அடுத்த தினமே தமிழகம் வந்தடைந்தனர். இதில் எங்கே தாமதம் என்று முதலமைச்சர் கூறுகிறார்?
பேரிடர் இழப்பீடு நிவாரண நிதி என்பது, மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து, அதன் பின்னரே விடுவிக்கப்படும் என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரியாதா? கையிருப்பில் இருக்கும் நிதியில் என்ன நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்? பொதுமக்கள் கோபத்திலிருந்து திமுக அரசின் தவறுகளை மறைத்துத் தப்பித்துக் கொள்ள, மத்திய அரசின் மீது பழி போட்டு ஆடும் நாடகம், இன்னும் எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று முதலமைச்சர் நினைத்துக் கொண்டிருக்கிறார்? கடந்த 2008 ஆம் ஆண்டு, நிஷா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணிதான் மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு இழப்பீடாகக் கோரியது ரூ.3,789 கோடி.
ஆனால் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி ரூ.523 கோடி மட்டுமே. எப்போதுமே, இழப்பீடு மதிப்பை அதிகப்படுத்திக் கூறுவதே தமிழக அரசின் வழக்கமாக இருக்கிறது. ஆனால் மத்திய அரசுகள், அந்தந்த காலகட்டத்திற்கான பேரிடர் இழப்பீடு நெறிமுறைகளைப் பின்பற்றியே இழப்பீடு வழங்கியுள்ளன. இதை அரசியல் ஆக்குவது தவறு. திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில், வெகு காலதாமதமாகவே மத்தியக் குழு, பேரிடர் ஆய்வுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது அடுத்த நாளே மத்தியக் குழுவினர் களத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். வெகுவிரைவில், இழப்பீடு நிதியும் பேரிடர் இழப்பீடு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தங்கள் நிர்வாகத் தோல்வியால் பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கிவிட்டு, மத்திய அரசின் மீது பழிபோடும் போக்கை திமுக இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் மடைமாற்றும் போக்கு எல்லா முறையும் வெற்றியடையாது. என்பதையும், பொதுமக்களுக்கு உண்மை தெரியவரும்போது, அவர்கள் கோபத்தின் விளைவுகளைத், திமுகவால் தாங்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
-
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா? -
மூணு தோல்வி அண்ணாமலை பெயரை தவிர்க்கவே போட்டியில்லை.. வாசகர் அங்கமுத்து ஆதங்கம் -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்!












Click it and Unblock the Notifications