"புளிச்சு" போச்சு! பாஜக வாரிசுகளை சொன்னால் 1 மணி நேரம் ஆகும்! அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி
சென்னை: திமுக இளைஞர் அணி கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிலையில், இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் அமித் ஷா கருத்துக்கு நேரடியாகப் பதிலடி கொடுத்தார்.
திமுகவை பொறுத்தவரை அங்கு மகளிர் அணி, மாணவர் அணி என 25க்கும் மேற்பட்ட அணிகளும் அமைப்புகளும் உள்ளது. அதில் மிகவும் வலுவான அணி என்றால் அது திமுக இளைஞரணி தான்.

முதல்வர் ஸ்டாலின் இளைஞராக இருந்த போது தொடங்கிய இந்த அணியின் செயலாளராக இப்போது உதயநிதி செயல்பட்டு வருகிறார். உதயநிதி இளைஞரணி செயலாளர் ஆன பிறகு பல ஆயிரம் இளைஞர்களைக் கட்சியில் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் தான் இளைஞரணியில் புதிதாக மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே திமுக இளைஞர் அணி கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் உதயநிதி உள்ளிட்ட முக்கிய இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இளைஞரணி கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞர் அணி கூட்டம் நடைபெறுகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தாண்டு கருணாநிதி நூற்றாண்டு அனுசரிக்கப்படும் நிலையில், இதை முன்னிட்டு நடத்தப்படும் உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி பாசறை குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த இளைஞர் அணி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இறுதியில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் அமித் ஷாவின் திமுக குடும்ப அரசியல் என்ற விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், "நமது எதிரிகள் எந்த ஆயுதங்களை எடுக்கிறார்களோ.. அதை ஆயுதத்தை நாம் கையில் எடுக்க வேண்டும். நமது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
முதல்வர் பேச்சு: இது திராவிட மாடல் ஆட்சி. 100 ஆண்டுகளுக்கு முன்பு, எதற்காக இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ.. அதைச் செயல்படுத்தும் ஆட்சி இது.. இதை இந்தியா முழுக்க எடுத்துச் செல்லவே இப்போது இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. இருப்பினும், இந்தக் கூட்டணியின் பெயரைக் கேட்டாலே சிலருக்குப் பதறுகிறது. பாட்னா, பெங்களூர் கூட்டங்களை வெற்றி பெற்றுள்ளதைப் பார்த்து பயம்

இதைப் பார்த்து பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மத்தியப் பிரதேசம், அந்தமான் என எங்குச் சென்றாலும் திமுகவை விமர்சிக்கிறார். ஏதோ ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடைபெறுவதாகச் சொல்கிறார். உண்மையில் கோடிக்கணக்கான மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆட்சி இது. உரிமை தொகை, இல்லம் தேடி மருத்துவம், என ஏகப்பட்ட திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.
அமித் ஷா: அமைச்சர் உதயநிதி சொன்னது போல.. நேற்று அமித் ஷா இங்கு வந்து பேசியிருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது அல்லவா.. இனி பல மத்திய அமைச்சர்கள் வரிசையாகத் தமிழ்நாட்டிற்கு வருவார்கள்.
அமித் ஷா என்ன மத்திய அரசின் புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கத் தமிழ்நாடு வந்தாரா.. இல்லை ஏற்கனவே அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்து வைக்க வந்தாரா.. அவர் பாத யாத்திரையைத் தொடங்கி வைக்க வந்துள்ளார்.

புளிச்சு போச்சு: அது பாத யாத்திரை இல்லை.. குஜராத்தில் 2002ஆம் ஆண்டிலும், இப்போது மணிப்பூரில் நடந்த கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை தான் இது. உள் துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூருக்கு என்ன செய்தார். அங்கே அமைதி யாத்திரை நடத்த முடியவில்லை. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படாதா என்ற எண்ணத்தில் பாத யாத்திரையைத் தொடங்கி வைக்கவே அமித் ஷா இங்கு வந்துள்ளார்..
நேற்று வந்து திமுக குடும்ப கட்சி என்கிறார். இதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது. வேறு எதாவது சொல்லுங்கள் என நானே கேட்கிறேன்.. எந்தவொரு பாஜக தலைவர்களின் வாரிசும் அரசியலில் இல்லை.. இருப்போர் அனைவரும் நாளையே விலகிவிடுவார்களா.. பதவியில் இருக்கும் பாஜக தலைவர்களின் வாரிசுகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் ஆகும். எனவே, வேறு எதாவது புதிதாகச் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications