ஆஹா தலைநகரே காலியாகுதே.. இன்று ஒரேநாளில் சென்னையை விட்டு வெளியேறிய மக்கள் எவ்வளவு பேர் தெரியுமா?
சென்னை: சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட இன்று கூட்டம் கூட்டமாக மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இந்நிலையில் தான் இன்று ஒரே நாளில் எத்தனை பேர் சென்னையை காலி செய்து சென்றனர் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிகை என்பது வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. 16ம் தேதி மாட்டு பொங்கலும், 17 ம் தேதி உழவர் திருநாளும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாட ஆர்வமாக உள்ளனர்.

இதனால் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் தொழில் சார்ந்து தங்கி வேலை செய்வோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு கிளம்பி உள்ளனர். பொங்கல் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றுவோர் இன்றே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு உள்ளனர்.
அதேபோல் பலரும் நாளை சனிக்கிழமை விடுப்பு எடுத்துள்ள நிலையில் இன்று குடும்பத்துடன் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு கிளம்பி உள்ளனர். பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு வழக்கமாக இயங்கும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 4,706 பேருந்துகள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்கள் சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையங்கள் உள்பட 6 இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல மக்களின் கூட்டம் என்பது பஸ் நிலையங்களில் அலைமோதி வருகிறது. இந்நிலையில் தான் கிளாம்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையங்களில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் தான் இன்று ஒரே நாளில் சென்னையில் இருந்து பஸ்கள் மூலம் மட்டுமே 1.19 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். முன்பதிவு, முன்பதிவு இல்லாத பஸ்களில் பயணித்தவர்களின் அடிப்படையில் இந்த தகவல் என்பது வெளியாகி உள்ளது. இதுதவிர பலரும் கார்கள், ரயில்கள் மற்றும் விமானங்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் இன்று ஒரே நாளில் சென்னையை காலி செய்தவர்களின் எண்ணிக்கை என்பது 1.50 லட்சத்தை தாண்டி 2 லட்சத்தை தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் என இன்னும் 2 நாட்கள் பொங்கலுக்கு முன்பு உள்ளது. இதனால் அந்த நாட்களிலும் ஏராளமானவர்கள் பஸ்கள், ரயில்கள், கார்கள், விமானங்கள் மூலம் சொந்த ஊர் செல்ல உள்ளனர். இதனால் தலைநகர் சென்னையை பொங்கல் பண்டிகைக்காக சுமார் 6 முதல் 8 லட்சம் பேர் வரை காலி செய்யலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications