பிற மாநிலத்தவரும் தமிழ் கற்க வேண்டும்.. ஆளுநர் ரவி முன்பு அழுத்தமாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: பிற மொழி பேசுபவர்கள் தமிழை கற்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியது வைரலாகி வருகிறது.
மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்தநாள் விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. காந்தி பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் கவிதை போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

ஆளுநர் பேச்சு
இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் காந்தியடிகளை நாம் மறந்து வருகிறோம். அவரை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றது. காந்தியின் கொள்கை வழியில்தான் நம் நா்டின் வளர்ச்சி உள்ளது.. காந்தியை போல் வேறு யாரும் இந்த நாட்டை புரிந்து கொண்டது கிடையாது.

மக்களின் நாடித் துடிப்பு
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களின் நாடித் துடிப்புகளை அறிந்தவராக காந்தி இருந்தார். பன்முகம் கொண்ட இந்தியாவில் அனைவரும் காந்தியோடு ஒன்றுபடுவர். தமிழர், தமிழ் கலாச்சாரம், தமிழ்மொழி மீது பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவர் காந்தி என ஆளுநர் ரவி புகழாரம் சூட்டினர்.

அமைச்சர் மா சுப்பிரமணியன்
இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசுகையில் எதிர்காலத்தில் ஒற்றுமையோடும் ஒருமைப்பாட்டோடும் விளங்கிட வேண்டும் என்றால், தமிழ் அல்லாத பிற மாநில மக்கள் அனைவரும் உலகின் தலைச்சிறந்த மொழியான தமிழ் மொழியை படிக்க வேண்டும் என காந்தியடிகள் சொல்லியுள்ளார் என மா சுப்பிரமணியன் பேசினார்.

அழுத்தமாக கூறிய மா சுப்பிரமணியன்
காந்தி சொல்லியதாக கூறியவற்றை மா சுப்பிரமணியன் இருமுறை உரக்கவும் அழுத்தமாகவும் சொன்னார். அதுவும் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்பு தமிழை பிறமாநிலத்தவர்கள் கற்க வேண்டும் என்ற பேச்சை திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் மொழிதான் இணைப்பு மொழி என ஏ.ஆர். ரஹ்மான், பா ரஞ்சித் உள்ளிட்டோர் அமைச்சர் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்தது நினைவுக்கூரத்தக்கது.












Click it and Unblock the Notifications