அசையுது அஸ்திவாரம்..தமிழகத்தில் "வாக்காளர்களுக்கு" குறி.. பிரதமர் மோடியிடமிருந்து போன் வரப்போகுதாமே
சென்னை: பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தமிழகத்தில் முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்களிடம் இன்று உரையாட உள்ளார். இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்கிறார்கள்.. வழக்கம்போலவே, மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகவும், தேர்தல் அட்டவணை தயாரிப்புகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருவதாகம் தெரிகிறது. எனினும், தேசிய கட்சிகளும், அந்தந்த மாநில கட்சிகளும் எம்பி தேர்தலுக்கான வேலையை துவங்கிவிட்டன.

பிளான்கள்: இதில், கடந்த 2 வருடத்துக்கு முன்பேயே களப்பணியை ஆரம்பித்தது பாஜகதான்.. தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் நிறைய பிளான்களை வகுத்து வந்துள்ளது.. சமீபகாலமாகவே, செல்வாக்கு மிக்க மாநிலங்களில் வடக்கே சறுக்கலை சந்தித்து வருகிறது. எனவே, வடக்கில் விட்டதை தெற்கில் பிடிக்க, கடுமையான முயற்சியை எடுத்து வருகிறது.
அந்தவகையில், தமிழகத்திலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தொடங்கி உள்ளன. எனினும் தேர்தல் கூட்டணி அறிவிக்கவில்லை. தனித்து போட்டியிட போகிறதா? அல்லது அதிமுகவை சமாதானப்படுத்தி அவர்களுடன் கூட்டணி வைக்க போகிறதா? என்று தெரியவில்லை. ஆனால், இந்த முறை, பாஜகவுக்கான வாக்கு சதவீதத்தை தமிழகத்தில் உயர்த்தி விட வேண்டும் என்பதில் தேசிய தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.
மோடி வருகை: இதை அடிப்படையாக வைத்தே, பிரதமர் மோடியின் தமிழகம் வருகை அமைந்து வருகிறது. இந்த மாதத்திற்குள்ளேயே 2 முறை தமிழகம் வந்துசென்றுள்ள நிலையில், விரைவில் மீண்டும் தமிழகம் வரப்போவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில்தான், 2 நாட்களுக்கு முன்பு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "18 வயது முதல் 21 வயதுக்குள்ளான முதல் முறை வாக்காளர்கள் நல்ல ஆட்சி, நல்ல அரசியல், நல்ல ஆளுமை மிக்க தலைவர்களை எதிர்பார்க்கின்றனர். இதனால் வரும் ஜனவரி 25ம் தேதி தமிழக பாஜக சார்பில் 234 சட்டசபை தொகுதிகளில் ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
வாக்காளர்கள்: குறிப்பாக முதல் முறை ஓட்டளிக்க உள்ள வாக்காளர்களை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்க இருக்கிறோம். பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தமிழகத்தின் முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்களிடம் பேச உள்ளார்.
இது பாஜகவின் நிகழ்ச்சி அல்ல. தாமரையின் நிகழ்ச்சி அல்ல. நானும் அந்த நிகழ்ச்சியில் இருக்கமாட்டேன். பிரதமர் நல்ல ஆட்சி பற்றியும், நல்ல அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், 2024 தேர்தல் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமர் நேரடியாக பேச உள்ளார்'' என்று தெரிவித்திருந்தார்.
முதல்முறை ஓட்டு: அந்தவகையில், தமிழகத்தின் இளம் வாக்காளர்களுடன் பிரதமர் இன்று பேசப்போகிறார். பிரதமருடன் உரையாடவிருப்பது, இளம் வாக்காளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
2 நாட்களுக்கு முன்பு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருந்தார். அதில், முதல் முறையாக வாக்களிக்கப்போகும் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கையானது மொத்தம் 5,26,205 என்று தெரிவித்திருந்தார்.. அதாவது 18 - 19 வயதுள்ள 5,26,205 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களாம். இதில், ஆண்கள் 2,74,035, பெண்கள் 2,52,096 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 74 என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications