கோட்டை கொத்தளத்தின் கொடி மரம் வரலாறு தெரியுமா? 1687ல் மரத்தில் 150 அடி! 1994ல் இரும்பில் 119 அடி!
சென்னை: சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கொடி மரம் பற்றிய வரலாறை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அவர் முன்னெடுத்த தீவிர முயற்சியால், 1974 முதல் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றலாம் என்ற உரிமை பெறப்பட்டது. 1687-1692 வரை, சென்னை மாகாண ஆங்கிலேய ஆளுநராக இருந்த 'யேல்' என்பவரின் காலகட்டத்தில் 150 அடி மரத்திலான கொடி கம்பம் நிறுவப்பட்டது.

அந்த மரக் கொடிக்கம்பம் பழுதடைந்ததால், 1994ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 119 அடி உயர இரும்பிலான கொடி கம்பம் நிறுவப்பட்டது. அதனை நிறுவியது கட்டுமானத்திற்கு பெயர் பெற்ற எல் அண்ட் டி நிறுவனமாகும்.
கோட்டை கொத்தளத்தின் பீடத்திற்குமேல், கொடி கம்பம் 3 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. கொடி கம்பம் முதல் அடுக்கு, 69 அடி உயரம், 20 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 10 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது. கொடி கம்பம் இரண்டாம் அடுக்கு, 30 அடி உயரம், 12 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 5 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது.
கொடி கம்பம் மூன்றாம் அடுக்கு, 20 அடி உயரம், 6 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே சுதந்திரத் தினத்தை ஒட்டி தலைமைச் செயலகத்தில் "தேசிய கொடி கம்பம்" புதுப்பித்தல் பணி ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் கோட்டை கொத்தளத்தின் கூரை மராமத்துப்பணியும் தனியாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications