சென்னை ஜெயஸ்ரீ ஆடிய சதுரங்கவேட்டை.. கோடிகளை சுருட்டி பலே கேடித்தனம்.. வசமாக சிக்கிய வங்கி ஊழியர்
சென்னை: சென்னை சூளைமேட்டில் தனியார் வங்கியில் பணியாற்றிய பெண் ஊழியர், மூதாட்டியை ஏமாற்றி ரூ.2½ கோடியை சுருட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி, ரூ.2.65 கோடியை வாங்கிய முன்னாள் வங்கி ஊழியர்,. வெறும் 64 லட்சம் ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு அப்படியே பணத்தை சுருட்டி இருக்கிறார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் பூர்ணிமா நீத்து என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் பூர்ணிமா நீத்து கூறுகையில், என்னுடைய தாயார் சாந்தகுமாரிக்கு (வயது 66) ஜெயஸ்ரீ என்பவர் அறிமுகமானார். ஜெயஸ்ரீக்கு 39 வயதாகிறது. இவர் சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
என் அம்மா சாந்தகுமாரியிடம் ஜெயஸ்ரீ வந்து, தானும் தன் குடும்பத்தினரும் இணைந்து வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால், அதில் வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும் ஆசை காட்டினார். இதை உண்மை என்று நம்பி எனது தாயாரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.2.65 கோடி ஜெயஸ்ரீயின் குடும்ப நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் லாப பங்கு தொகை என்று ரூ.64 லட்சத்தை எனது தாயாருக்கு ஜெயஸ்ரீ கொடுத்திருக்கிறார். ஆனால் அதன்பிறகு லாப பங்கு தொகை என்று எந்தவித தொகையும் கொடுக்கவில்லை. முதலில் முதலீடு செய்த ரூ.2.65 கோடியையும் முறையாக திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். மேலும் அவர் பார்த்த வங்கி வேலையையும் ஜெயஸ்ரீ விட்டுவிட்டார். ரூ.2.65 கோடியை மோசடி செய்த ஜெயஸ்ரீ மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து தரவேண்டிய பணத்தை வசூலித்து தரும்படி வேண்டுகிறேன்" இவ்வாறு பூர்ணிமா நீத்து தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மோசடி செய்ததற்காக முகாந்திரம் இருந்ததால்,. மோசடி புகாரின்பேரில், முன்னாள் வங்கி ஊழியர் ஜெயஸ்ரீயை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications