முடிவுக்கு வந்த அஇசமக.. கடைசி வரை நிறைவேறாமல் போன சரத்குமாரின் ஆசை
சென்னை: தனியாக களம் கண்டு கடைசி வரை ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாத நிலையில், பாஜகவில் தனது கட்சியை இணைத்துள்ளார் நடிகர் சரத்குமார். சமத்துவ மக்கள் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்ற அவரது கனவும், அந்த கட்சியின் சார்பாக முதல்வராக வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறாமல் போய்விட்டது.'
சூர்ய வம்சம், நாட்டாமை என படங்களில் நடித்த உச்சத்தில் இருந்த சரத்குமார், முதல் முதலாக 1996ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். பின்பு 1998ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் லோக்சபா தேர்தலில் வேட்பாளராக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

எனினும் 2001ல் திமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக தேர்வானார். ஆனால் 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் 2006 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறிவிட்டார்.
அதேநேரம் அத்தேர்தலில் திமுகவிற்கு எதிராகவும், அதிமுகவிற்கு ஆதரவாகவும் இணைந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனிடையே அவரது மனைவி ராதிகா அதிமுக கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக அக்டோபர் 2006ம் ஆண்டு வெளியேறினார்.
இதனைத் தொடந்து சரத்குமார் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். அக்கட்சியை துவங்கும் போது பேசிய சரத்குமார், இக்கட்சி காமராஜர் , எம்ஜிஆர், அப்துல் கலாம், ஆகியோரின் சிந்தனைகளை, கொள்கைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து செல்லும் என்றார்..
சரத்குமார் தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார். பின்னர் அதிமுக கூட்டணியில் சேர்ந்தார். சரத்குமாரின் சமக கட்சி, 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டது. இதில் தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் ஏ. நாராயணனும் வெற்றி பெற்றார்கள்..
2016 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார், தோல்வியை தழுவினார். அதன்பின்னர் 2021 சட்டசபை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து 40 தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் ஒரு தொகுதியில் கூட சரத்குமாரின் கட்சி வெற்றி பெறவில்லை.. இதனிடையே 2016ம் ஆண்டு முதலே கட்சியை நடத்தும் விஷயத்தில் நிதி நெருக்கடியில் சரத்குமார் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில சரத்குமார் கட்சியை ஆரம்பித்த 17 வருடங்களுக்கு பிறகு கலைத்துள்ளார். சமக சார்பில் முதல்வராக வேண்டும் என்ற அவரது ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போனது.












Click it and Unblock the Notifications