சென்னை புறநகர் பகுதியில் இதை எல்லாம் கவனிக்காமல் வீடு வாங்கினால்.. கடைசி வரை பட்டா வாங்கவே முடியாது
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியில் இதை எல்லாம் கவனிக்காமல் வீடு வாங்கினால்.. கடைசி வரை பட்டா வாங்கவே முடியாது.. அனாதீனம் நிலங்களுக்கு CMDA மற்றும் DTCP அங்கீகாரம் கண்டிப்பாக தரமாட்டார்கள். நிலங்களை தனி நபர் உரிமை கொண்டாட முடியாது. எனவே சென்னையில் அனாதீனம் என அரசு வகைப்படுத்தி இருந்தால் வாங்கிவிடாதீர்கள்.
சென்னைக்குள் அவ்வளவு எளிதில் வீடு வாங்கிவிட முடியாது. அதேநேரம் சென்னையின் புறநகர் பகுதிகளில் மிகவும் வசதி படைத்தவர்கள் வீடு வாங்கலாம். ஓரளவு நல்ல வருமானம் உள்ளவர்கள், அரசு ஊழியர்கள், லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஐடி ஊழியர்கள் சென்னைக்கு வெளியே தங்கள் வாழ்நாள் சேமிப்பை கொட்டி வீடு வாங்க முடியும். அடுக்குமாடி குடியிருப்புகளும் வாங்க முடியும். அப்படி வாங்கும் குடியிருப்புகளை கண்டிப்பாக கவனமாக வாங்க வேண்டும்.

ஆவணங்களை சரிபார்க்காமல் இந்தியாவிலேயே பிரபலமான நிறுவனங்கள் விற்கிறார்கள், தமிழ்நாட்டிலேயே பிரபலமான நிறுவனங்கள் விற்கிறார்கள் என்று நினைத்து வாங்கிவிடாதீர்கள். வங்கியில் எளிதாக கடன் தருகிறார்கள். யாரும் நம்ப முடியாத அளவிற்கு வசதிகள் தருகிறார்கள் என்று நினைத்து வாங்கிவிடாதீர்கள்.. அப்படி வாங்கினால் பட்டா வாங்க யாராலும் முடியாது.
நிலத்தில் வில்லங்கம் என்ற வார்த்தைக்கு பின் பல அர்த்தம் உள்ளது. நீதிமன்றத்தில் நிலத்தின் மீது வழக்கு உள்ளதா? அது எந்த மாதிரியான நிலம் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதை கிராம நிர்வாக அலுவலகத்தில் தான் போய் பார்க்க முடியும். உதாரணமாக அனாதீனம் நிலம் என்றால் கண்டிப்பாக வாங்க கூடாது.
அந்த கால கட்டத்தில் உள்ள மக்கள் 30 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருந்தார்கள். ஆனால் நில உச்ச வரம்பு சட்டத்தின் அடிப்படையில் 30 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது என்று இருந்தது. 30 ஏக்கருக்கு மேல் யாராவது நிலம் வைத்திருந்தால் அது அரசாங்கத்திற்கு சேரும் என்று அறிவித்தனர். அப்படி அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட நிலங்களை அனாதீனம் நிலம் என்று அழைக்கப்படுகிறது. இதுபோல அரசாங்கம் கைப்பற்றிய நிலங்களுக்கு பட்டா கிடையாது.
அதுமட்டுமில்லாமல் இந்த அனாதீனம் நிலங்கள் CMDA மற்றும் DTCP அங்கீகாரம் இல்லாத மனைகளாக இருக்கும். இதுபோன்ற நிலங்களை தனி நபர் உரிமை கொண்டாடவே முடியாது.நீங்கள் அரசாங்க நிலம் என்று தெரியாமல் அதை வாங்கிவிட்டால் அந்த நிலத்திற்கு பட்டா கிடைக்குமா என்றால் அது கிடைக்காது. அனாதீனம் நிலம் அரசாங்கத்தின் சொத்து என்பதால் அதற்கு பட்டாவே இருக்காது.
அதேபோல உங்களிடம் இருக்கும் நிலம் அனாதீனம் நிலமாக இருந்தால் அதை நீங்கள் வெளியில் யாரிடமும் விற்கவும் முடியாது. அதேபோல் நீங்கள் வைத்திருக்கும் நிலத்திற்கு பழைய பட்டா இருந்தாலும் அதை நீங்கள் விற்கவும் கூடாது. எனவே நீங்கள் நிலம் வாங்கும் போது அந்த நிலத்தை பற்றி முழுவதுமாக விசாரித்தே வாங்குங்கள். சென்னையை சுற்றி இதுபோன்ற நிலங்கள் இருக்கின்றன. இந்த நிலங்களை வாங்கிய மக்கள் அவதிப்பட்டு கொதித்து போய் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
எனவே வங்கியில் கடன், பிரபலமான நிறுவனம், நல்ல சாலை, நல்ல இடம், சூப்பர் அடுக்குமாடி என எல்லாமே ஓகே என்றாலும், நிலத்தின் வகையை அறிந்து கொள்ளுங்கள். நிலத்தின் வகையை அறிய விஏஓ அலுவலகம் சென்றே அறிய முடியும். நிலத்தில் வில்லங்கத்தை அறிய வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நிலம் எந்த வகை என்பதை அறிந்து வாங்குங்கள். நிலம் சரியானது என்பது பற்றி தெரியாது என்றால், ரியல் எஸ்டேட் தொடர்பாக நன்கு அறிந்த நல்ல வழக்கறிஞரிடம் ஆவணங்களை கொடுத்து ஆய்வு செய்து வாங்குஙகள்.












Click it and Unblock the Notifications