ஆதவ் அர்ஜுனாவை விசிகவில் சேர சொன்னவர் யார்? அது தெரியுமா? அமீர் வீசிய புதிய குண்டு
சென்னை: விசிகவில் ஆதவ் அர்ஜுனாவைச் சேர சொல்லி சிபாரிசு செய்தவர் யார்? என்பதே இப்போது சந்தேகமாக உள்ளது என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
இயக்குநர் அமீர் நேரடியாக எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்றாலும் அவர் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்து அரசியல் கருத்துகளை முன்வைத்து வருகிறார். ஒரு காலகட்டத்தில் சீமானுடன் நெருங்கிப் பயணித்த அவர், இஸ்லாமியர்கள் தொடர்பாக அவர் முன்வைத்த கருத்துகளில் முரண்பாடு கொண்டு விமர்சிக்க தொடங்கினார்.

அது அமீர் மற்றும் சீமான் இடையேயான கருத்து மோதலாக வெடித்தது. இந்நிலையில்தான் அவர் விசிகவுக்கு நடந்து வந்த ஆதவ் அர்ஜுனா குறித்த சர்ச்சை பற்றி தனது வாட்ஸ் அப் பதிவின் மூலம் விமர்சனம் செய்து வந்ததை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன.
அவரது பதிவில், "ஒருவர் பணக்காரக் குடும்பத்தில் பிறப்பதால் பணக்காரராகலாம். ஒருவர் பணக்கார வீட்டில் சம்பந்தம் செய்வதால் கூட பணக்காரராகலாம். ஆனால், ஜனநாயக நாட்டில் யாரும் மன்னராக முடியாது" என்று பொருள்பட வாசகங்களை வைத்திருந்தார். அது நேரடியாக ஆதவ் அர்ஜுனாவை அட்டாக் செய்வதைப் போல் இருந்தது.
ஆதவ் அர்ஜுனாவுக்காக கடந்த 2024 எம்பி தேர்தலில் விசிக சார்பில் ஒரு பொதுத் தொகுதி கேட்கப்பட்டதாகப் பேச்சு அடிபட்டது. ஆனால்,திமுக 2 இடங்களை மட்டுமே ஒதுக்கியது. ஆதவ்க்கு சீட்டு கிடைக்கவில்லை என்பது உறுதியாக தெரிந்த பின்பே அவர் திமுக மீது விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினார் என்பது பலரது கருத்தாக உள்ளது. ஆனால், அதை ஆதவ் மறுக்கிறார். தான் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவே விசிகவில் இணைந்ததாகவும் பதவிக்காக வேண்டி அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
விசிக வாக்கு வங்கிக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் திமுக ஆட்சியில் அளிக்கப்படவில்லை என்பது ஆதவ் அர்ஜுனாவின் பிரதான குற்றச்சாட்டு. அதை இவர் முதன்முறையாக ஒன்றும் சொல்லவில்லை. பலமுறை திமுக கூட்டணியில் விசிகவுக்கு சீட்டு ஒதுக்கிய போது கேட்ட எண்ணிக்கையிலான தொகுதி வழங்கப்படவில்லை என்றாலும் இந்தக் கூட்டணியில் தொடர்வதாக முடிவு செய்துள்ளோம் என்று திருமாவளவனே ஊடக சந்திப்பின் போது விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்நிலையில்தான் இயக்குநர் அமீர், விசிகவில் ஆதவ் அர்ஜுனா இணைந்து குறித்தே சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார். உண்மையில் உங்களை விசிகவில் இணையச் சொல்லி சிபாரிசு வழங்கியது யார் என்றும் திடீரென்று 2023 ஆம் ஆண்டு அந்தக் கட்சிக்குள் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, தலைமையை மீறிய கலகக் குரலாக ஒலிக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றும் அமீர் பேசி இருக்கிறார்.
அமீர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், "ஆதவ் அர்ஜுனாவின் பின்புலத்தைப் பற்றி அதிகம் விசாரிக்காமல் கட்சியில் திருமாவளவன் அவரை இணைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஸ்டாலின் மற்றும் அவரது மருமகனுடன் சேர்ந்து மன்னர் ஆட்சியை உருவாக்கியதே ஆதவ் அர்ஜுனாதான் என்று சொல்கிறார். அதில் விசிகவின் பங்கு உள்ளதா? என்பதை விட இவரது பங்கு இருப்பதாக அவரே ஒப்புக் கொண்டுள்ளார். பிறகு ஏன் இப்போது மக்களிடம் வந்து மன்னர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிறார்? இது குழப்பமாக இல்லையா?" என்று தெரிவித்திருக்கிறார்.
திருமாவளவனே தனக்கு திமுக தரப்பிலிருந்து யாரும் அழுத்தம் தரவில்லை என்று விளக்கம் அளித்த பின்னரும் ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவை திமுக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொள்ளக்கூடாது என்று சொல்வது என்பது திருமாவின் தலைமையைச் சந்தேகிப்பதாகாதா?அவர் பொய் சொல்வதாக மக்கள் நினைக்க மாட்டார்களா? என்றும் அமீர் குறுக்கு விசாரணை செய்யும் தொனியில் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications