கொங்குவை கைப்பற்ற பக்கா பிளான் போட்ட ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்களின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்
சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் யாரெல்லாம் வேட்பாளர்களாக அறிவிப்பார்கள் என்பது குறித்து ஒரு உத்தேச பட்டியல் கிடைத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. மற்ற 19 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. எனினும் 21 தொகுதிகளில் யார் யார் போட்டியிட போகிறார்கள் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஆயினும் திமுக சார்பில் விருப்பமனுக்கள் பெறப்பட்டு அவர்களிடம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே நேர்காணல் நடத்தியுள்ளார். இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
யார் வேட்பாளர்கள்: அதன்படி தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர். பாலு, செல்வம், ஜெகத்ரட்சகன், அண்ணாதுரை, கதிர் ஆனந்த் ,கவுதம சிகாமணி, கனிமொழி, ஆ ராசா, சண்முகசுந்தரம், பழனிவேல் மாணிக்கம் உள்ளிட்டோர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
அது போல் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கோவை மக்களவைத் தொகுதியை பொருத்தமட்டில் தமிழச்சி தங்கபாண்டியனின் சம்பந்தி மகேந்திரனுக்கு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.
கரூர்: கரூர் தொகுதியை பொருத்தமட்டில் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்டு ஜோதிமணி வென்றார். இந்த முறை ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் தலைமைக்கு ரத்தத்தில் எழுதிய கடிதத்தையும் அனுப்பியுள்ளார்கள். எனவே ஜோதிமணியை தவிர்த்து காங்கிரஸில் கரூரில் செல்வாக்குடையவர்கள் யாரும் இல்லை என்றே தெரிகிறது.
எனவே திமுக, கரூர் தொகுதியை கேட்டு அதை காங்கிரஸ் விட்டுக் கொடுக்கும் பட்சத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் சங்கருக்கு வாய்ப்பு வழங்கலாம் என தெரிகிறது. அது போல் ஈரோடு தொகுதியில் திமுக இளைஞரணி நிர்வாகி பிரகாஷுக்கும் தேனி முன்னாள் எம்பி ஹாரூணின் மகன் இம்ரானுக்கும் வாய்ப்பு வழங்கலாம் என தெரிகிறது.
நெல்லை தொகுதி: நெல்லை தொகுதிக்கு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் அல்லது சபாநாயகர் அப்பாவுமின் மகன் அலெக்ஸ் அப்பாவு ஆகியோரில் ஒருவர் போட்டியிடுவர். அது போல் இந்த முறை கதிர் ஆனந்த் தொகுதி மாறி அரக்கோணத்திலும் அந்த தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் வேலூரிலும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த உத்தேச பட்டியலில் கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால் பொதுவாகவே மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு, தலைமை வாய்ப்பு கொடுக்கும். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வந்த டாக்டர் மகேந்திரனுக்கு இந்த தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது.
தமிழச்சியின் சம்பந்தி: இவர் தமிழச்சி தங்கபாண்டியனின் சம்பந்தி ஆவார். மகேந்திரன் திமுக ஐடி விங்கிலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சி கடந்த முறை மதுரை, கோவை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வென்றது. இந்த முறையும் அதே தொகுதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு கோவைக்கு பதிலாக திண்டுக்கல் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் கோவை தெற்கு சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்டார்.
வானதி சீனிவாசன்: தேர்தல் முடிவுகள் வெளியான போது அவர் வானதி சீனிவாசனுடன் நெக் டூ நெக் இருந்து கடைசியில் 1000 வாக்குகளில் தோல்வி அடைந்தார். அந்த தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை 3ஆம் இடத்திற்கு தள்ளினார் கமல்ஹாசன். இந்த வெற்றிக்கு காரணம் மகேந்திரனின் செல்வாக்குதான் என சொல்லப்பட்டது. எனவே மகேந்திரனுக்கு வாய்ப்பு கொடுத்து கொங்கு மண்டலமான கோவையை கைப்பற்ற திமுக முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications