‛திமுகவினர் மிஸ்ஸிங்’.. தமிழக வேட்பாளர்களில் பெரும் கோடீஸ்வரர் யார் தெரியுமா? டாப் 5 பட்டியல் இதோ
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும் கோடீஸ்வரர் யார் தெரியுமா? முதல் டாப் 5 பட்டியலில் திமுகவினர் ஒருவர் கூட இல்லாத நிலையில் அதிமுகவினர் 2 பேர், பாஜகவில் ஒருவர், பாஜக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 2 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் சுயேச்சைகளாகவும் ஏராளமானவர்கள் போட்டியிடுகின்றனர்.

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 609 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவார்கள். மேலும் கட்சி வாரியாக பார்த்தால் அதிமுக சார்பில் 34 வேட்பாளர்கள், திமுகவில் 22 வேட்பாளர்கள்(திமுக 21 வேட்பாளர்கள் + நாமக்கல் கொமதேக கட்சி வேட்பாளர் உதயசூரியனில் போட்டி) போட்டியிடுகின்றனர். பாஜகவில் சார்பில் 19 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் கூட்டணி கட்சியை சேர்ந்த 4 பேர் பாஜகவின் தாமரை சின்னத்தில் களமிறங்கி உள்ளனர்.
மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் 39 வேட்பாளர்கள் பாமகவில் 10 வேட்பாளர்கள், தேமுதிக சார்பில் 5 வேட்பாளர்கள், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் 3 வேட்பாளர்கள், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக சார்பில் தலா ஒரு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த வேட்பாளர்கள் அனைவரும் தாக்கல் செய்த வேட்புமனுவில் தங்களின் சொத்து மதிப்பு குறித்த விபரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளனர். அதனடிப்படையில் அறப்போர் இயக்கம் சார்பில் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழுவிபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் அறப்போர் செல்போன் செயலியை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும் கோடீஸ்வரர்களாக உள்ள டாப் 5 பேரின் பட்டியலை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் வேட்பாளர்களின் அசையும் சொத்து, அசையா சொத்துகளை கூட்டி அவர்களுக்கு இருக்கும் கடன் தொகையுடன் கழித்து சொத்து விபரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் தமிழக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்துடன் முதலிடத்தில் அசோக் குமார் உள்ளார். ஈரோடு அதிமுக வேட்பாளரான இவரிடம் ரூ.661 கோடி சொத்து மதிப்பு உள்ளது.
2வது இடத்தில் பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் தேவநாதன் யாதவ் உள்ளார். இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவராக உள்ள தேவநாதன் யாதவிடம் ரூ.206 கோடி சொத்து உள்ளது. இந்த பட்டியலில் 3வது இடத்தில் கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் உள்ளார். இவரிடம் 131 கோடி சொத்து உள்ளது.
4வது இடத்தில் பாஜக கூட்டணியை சேர்ந்த புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் உள்ளார். பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏசி சண்முகத்தின் சொத்து மதிப்பு ரூ.123 கோடியாக உள்ளது. இந்த பட்டியலில் 5வது இடத்தில் கேபி ராமலிங்கம் உள்ளார். நாமக்கல் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளரான இவரிடம் ரூ.89 கோடிக்கு சொத்து உள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications