"வேலையை" காட்டிய நுபுர் ஷர்மா.. கோர்ட் போட்ட போடு.. அதிர்ந்த பாஜக.. முக்கியமா "இவரை" மறந்துட்டீங்களே
நுபுர் ஷர்மா விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று கண்டிப்பு காட்டி உள்ளது
சென்னை: நுபுர் ஷர்மா விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று கண்டிப்பு காட்டியுள்ளது, பாஜகவுக்கு நிஜமாகவே ஷாக்கான செய்திதான்.. இதற்கு காரணம் என்ன?
பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்களிடமிருந்தும் பெரும் கண்டனத்துக்குள்ளானது.
"ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர், இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன்மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது.. நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று சுப்ரீம் கோர்ட் நுபுர் ஷர்மா வழக்கில் இவ்வாறு கூறியுள்ளது.
நுபுர் சர்மாவை ஏன் கைது செய்யலை? சிவப்பு கம்பள மரியாதை கொடுத்ததா போலீஸ்?உச்சநீதிமன்றம் விளாசல்
கண்டிப்பு
இதுவரை எந்த ஒரு செய்தி தொடர்பாளரையும் சுப்ரீம் கோர்ட் இவ்வாறு கண்டித்ததாக வரலாறு இல்லை.. எப்படி தமிழக ஆளுநர் ரவியிடம், சுப்ரீம் கோர்ட் காட்டம் காட்டியதோ, அதுபோலவே, பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவிடமும் கண்டிப்பு காட்டி உள்ளது, மிக முக்கிய கவனத்தை ஈர்த்து வருகிறது.. பொதுவாக ஒரு செய்தி தொடர்பாளர் என்பவர், கட்சியின் முழுமையான பிரதிநிதியாக செயல்படுபவர்.. ஒட்டுமொத்த கட்சியின் பிம்பம் அவர்..
ஐடி விங்
கட்சிக்கும், பொதுமக்களுக்கும் இணைப்பாக செயல்படுபவர்.. கட்சியையும், கட்சியின் கொள்கையையும், மக்களுக்காக கட்சி மேற்கொள்ளும் முன்னெடுப்புகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் நிஜமான போஸ்ட்மேன் இந்த செய்தி தொடர்பாளர்தான்... இப்போதுதான் ஐடி விங் என்று தனியாக ஒன்று கட்சிகளுக்கு இயங்குகிறது.. ஆனால், இதையெல்லாம் சேர்த்து அன்றே மொத்தமாக கவனித்து கொண்டவர்கள்தான் இந்த செய்தி தொடர்பாளர்கள்தான்.
நபிகள் நாயகம்
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சையான கருத்தை, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் இருந்து கொண்டு ஒருவர் எப்படி சொல்ல முடியும் என்ற ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் நுபுர் விஷயத்தில் ஏற்பட்டது.. மத்தியில் பாஜக ஆளும் கட்சி என்பதால், இந்த துணிச்சல் இவருக்கு வந்ததா? அல்லது இஸ்லாமியர்களை தொட்டால் அது மதரீதியான உணர்வுகளை புண்படுத்திவிடும் என்பதை அறியாமல் செய்துவிட்டாரா? என்பது தெரியவில்லை.
சுஷ்மா சுவராஜ்
இதே பாஜகவில்தான், இதே துறையில் அன்றே துடிப்புடன் செயல்பட்டவர்தான் சுஷ்மா சுவராஜ்தான்.. இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர்.. பாஜகவின் முதல் செய்தி தொடர்பாளர் சுஷ்மாதான்.. பாஜகவுக்கு மட்டுமில்லை... வேறு எந்த கட்சிக்குமே அதுவரை பெண் செய்தி தொடர்பாளர் கிடையாது. சுஷ்மாதான் முதல் ஆள்.
படுகுழிகள்
இவர் வெளியுறவு துறை அமைச்சரான நேரமோ என்னவோ, பாகிஸ்தான் ஒரு பக்கமும் சீனா மற்றொரு பக்கம், இலங்கை இன்னொரு பக்கமும் சவால் நிறைந்த அம்புகளை சுஷ்மா மீது தொடுத்து கொண்டே இருந்தது. ஒரு பெண்ணாக இருந்து இத்தனை நாட்டின் பிரச்சனைகளை கையாண்டு, இந்தியாவை படுகுழியில் தள்ளாமலும், மோசமான வன்முறை துண்டாடலுக்கு இட்டு செல்லாமலும் சுஷ்மா மிக சிறப்பாகவே கையாண்டார்.
சாட்சாத் வாஜ்பாய்
இத்தகைய பக்குவமும், அணுகுமுறையும், சவாலை எதிர்கொள்ளும் துணிவும் சுஷ்மாவுக்கு எங்கிருந்து கிடைத்தது தெரியுமா? சாட்சாத் வாஜ்பாயின் பட்டறையில்தான்! அதனால்தான் 2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டவர்களில் சுஷ்மாவும் ஒருவராக இருந்தார்... ஒரு பெண் செய்தி தொடர்பாளர் பிரதமர் வேட்பாளராக பரிசீலிக்கும் அளவுக்கு பேசப்பட்டார் என்றால், சுஷ்மாவின் உழைப்பும், கட்சி மீதான விசுவாசமும், மக்களின் ஒற்றுமையின் மீதான அக்கறையும் என்பதை மறுக்க முடியாது.
சுஷ்மா தான்
செய்தி தொடர்பாளர் என்ற பதவிக்கான முக்கியத்துவத்தை அதிகரித்து விட்டு சென்றவர் சுஷ்மாதான்.. அப்படிப்பட்ட பதவியை, நுபுர் ஷர்மாவுக்கு வழங்கியது பாஜக.. ஆனால், அந்த பதவியின் மதிப்பு, இவருக்கே தெரியவில்லை என்றே நம்மால் யூகிக்க முடிகிறது.. மக்களின் ஒற்றுமைக்கும், மதச்சார்பின்மைக்கும் முக்கியத்துவம் தந்திருந்தால், இஸ்லாமியர்களை நுபுர் தொட்டிருக்க மாட்டார்..
நெருங்கும் தன்மை
எந்த ஒரு பிரமுகரும் சர்ச்சைகளாலும், சலசலப்புகளாலும் மட்டுமே, தன்னை நிலைநிறுத்தி கொள்ள முடியாது...மக்களிடம் நெருங்கும் தன்மை, கடினமான சூழலிலும் அதை கையாளும் முறை, மாற்று கருத்தாக இருந்தாலும், அதை தமிழிசை சவுந்தரராஜனை போல், வெளிப்படுத்தும் நாகரீக போக்கு, சமயோஜித புத்தி, இவை அனைத்தும்தான், மக்களிடம் நன்மதிப்பை பெற்று தரும்..
தமிழிசை
கட்சிக்கு மக்களிடம் நல்ல பெயரை உருவாக்குவதில் செய்தித் தொடர்பாளர்களின் பங்கு முக்கியமானது என்பதையாவது இனியாவது, இந்த பதவியை அலங்கரித்த நுபுர் ஷர்மா தெரிந்து கொள்ள வேண்டும்.. இல்லாவிட்டால், தமிழிசை சவுந்தரராஜன் போன்ற கண்ணியம் மிக்க, பெண் தலைவரிடமாவது ஆலோசனைகளை கேட்டு பெற்று கொள்ள வேண்டும்.. அதுவும் இல்லாவிட்டால், இன்று சுப்ரீம் கோர்ட் கண்டித்ததுபோல, வேறு எங்காவது, யாரிடமாவது அசிங்கப்பட்டு, நிற்க வேண்டியதுதான்.