எலக்ட்ரிக் ஷாக்.. மூச்சு பேச்சின்றி விழுந்த சிறுவன்.. சிபிஆர் கொடுத்து உயிரை மீட்ட டாக்டர்.. வீடியோ
சென்னை: மின்சாரம் தாக்கியதால் மூச்சு பேச்சின்றி சுயநினைவின்றி விழுந்த 6 வயது சிறுவனுக்கு சிபிஆர் முதலுதவி சிகிச்சை கொடுத்து மருத்துவர் ஒருவர் உயிரை காப்பாற்றியுள்ளார். சிறுவனை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற சேவை எண்ணத்துடன் டாக்டர் சிபிஆர் முதலுதவி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மின்சாரம் தாக்கியதில் மூச்சு பேச்சின்றி சுயநினைவை இழந்து கிடந்த சிறுவனை சிபிஆர் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியுள்ளார் ஆந்திராவை சேர்ந்ந மருத்துவர். தக்க சமயத்தில் சிறுவனது உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். சிறுவனை காப்பாற்றும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்...

மூச்சு பேச்சின்றி கிடந்த சிறுவன்: ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள அய்யப்பா நகர் பகுதியில் 6 வயதேயான சாய் என்ற சிறுவன் தாக்கியதில் மூச்சு பேச்சு இன்றி விழுந்தான். இதைப்பார்த்த சிறுவன் சாயின் பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினர். அப்போது அந்த வழியாக மருத்துவர் நன்னப்பனேனி ரவாலி என்ற பெண் மருத்துவர் வந்து கொண்டிருந்தார்.
இதயதுடிப்பு குறைந்தது: சிறுவனுக்கு என்ன ஆனது என்று கேட்ட போது நடந்த விவரத்தை பெற்றோர்கள் கூறினர். உடனடியாக சிறுவனை பரிசோதித்த மருத்துவர் ராவலி, இதயதுடிப்பு மிகவும் குறைவாக இருந்ததை பார்த்தார். இதனால் சிறுவனை காப்பற்ற சிபிஆர் முதலுதவியை அங்கேயே கொடுத்தார். சாலையோரம் என்று கூட பார்க்காமல் சிறுவனை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற சேவை எண்ணத்துடன் சிபிஆர் முதலுதவி அளித்துவிட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றார்.
உயிர் பிழைத்த சிறுவன்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிறுவன் நல்ல உடல்நலம் பெற்றான் அதற்கு அடுத்த நாளே மருத்துவமனையிலும் இருந்தும் சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளான். சிறுவன் சாய்க்கு மின்சாரம் தாக்கிய சம்பவம் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இருந்த போதிலும் தற்போதுதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டாக்டருக்கு பாராட்டு: மருத்துவர் ராவலியின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சிறுவனுக்கு மருத்துவர் சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளிக்கும் வீடியோ காட்சிகளும் பரவி வருகின்றன. மருத்துவர் ராவலி நடந்த சம்பவம் பற்றி கூறுகையில், "கடந்த 5 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நான் அய்ய்ப்பா நகர் வழியாக சென்று கொண்டிருந்தேன். அப்போது, ஒரு சிறுவனை தோளில் போட்டுக்கொண்டு ஒருவர் சென்றதை கவனித்தேன்.
சிபிஆர் அளிக்காவிட்டால்: உடனடியாக எனது வாகனத்தை நிறுத்தி சிறுவனை பரிசோதித்த போது, சிறுவனின் இதயதுடிப்பு மிகவும் குறைவாக இருந்தது. சிறுவனும் சுயநினைவு இன்றி இருந்தான். எனவே, இந்த சமயத்தில் சிறுவனுக்கு சிபிஆர் அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் எனக் கருதி உடனடியாக முதலுதவி கொடுத்தேன்" என்று கூறினார்.
சிபிஆர் சிகிச்சை என்றால் என்ன?: சிபிஆர் என்பதன் விரிவாக்கம் Cardio Pulmonary Resucitation ஆகும். இது இதய சுவாச முடக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மூளையின் செயலிழப்பை தடுக்கும். நமது மூளைக்கு தொடர்ச்சியாக 6 நிமிடங்களுக்குள் மேல் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் நிரந்தரமாக கோமாவுக்கு செல்லும் நிலை ஏற்படும்.
மயங்கி விழுந்தவரை தரையில் படுக்க வைத்து இதய பகுதியில் உள்ளங்கைகளால் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து கொண்டே இருந்தால் மயங்கி கிடப்பவரின் இதயம் மீண்டும் இயங்கத் தொடங்கும். இந்த சிபிஆர் சிகிச்சை செய்துக் கொண்டிருக்கும் போதே 108 ஆம்புலன்ஸுக்கும் போன் செய்து வரவழைத்துவிட வேண்டும். அதற்குள் முதலுதவி சிகிச்சையில் இதயம் செயல்பட தொடங்கியதுமே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிடலாம்.












Click it and Unblock the Notifications