கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.. தமிழ்நாடு, புதுச்சேரியில் போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்
சென்னை: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாட்டில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார். அவர், கடந்த 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் காலையில் அவர் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டிலும் மருத்துவர்களின் போராட்டம் தொடங்கியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பேரணியில் ஈடுபட்டனர். அதேபோல, பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டு சேலத்தில் மருத்துவர்கள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து, பயிற்சி மருத்துவர்கள் கூறுகையில், மருத்துவக் கல்லூரிகளில் பெண் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சிபிஐ உரிய விசாரணை நடத்தி இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை இன்று தொடங்கியுள்ளனர். மருத்துவர்கள், மருத்துவ மாணர்கள், நர்ஸிங் பணியாளர்கள் என 900க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்கவில்லை. அவசர சிகிச்சை, ஐசியூ, பிரசவப் பிரிவுகள் செயல்பட்டன.
ஜிப்மர் ரெசிடன்ட் மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை சேவை, ஆபரேஷன் தியேட்டரில் சேவைகளை காலவரையின்றி நிறுத்தி வேலை நிறுத்தம் துவங்கப்பட்டுள்ளது. அவசரகால சேவைகள், ஐசியூ உள்ளிட்ட சேவைகள் வழக்கம்போல செயல்படும். பெண் மருத்துவர் கொலைச் சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை தேவை. சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பெண் மருத்துவரின் கண்ணியம், உயிரைப் பாதுகாக்க தவறிய அதிகாரிகள் பதவி விலக வேண்டும். சுகாதாரத் துறையினர் அனைவரும் இப்போது ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் என்றனர்.












Click it and Unblock the Notifications