மாமன்னன் படம் முன்னாள் சபாநாயகரை சொல்கிறதா.. வந்து விழுந்த கேள்வி.. மா.சுப்பிரமணியன் பதில் இதுதான்
சென்னை: மாமன்னன் திரைப்படத்தில் வரும் கேரக்டர் முன்னாள் சபாநாயகரை காட்டுவதாக பேசப்படுவது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இக்கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலை பார்க்கலாம்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'மாமன்னன்' திரைப்படம் ஒடுக்கப்பட்டோரின் அரசியலைப் பேசும் படமாக பெரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். அதாவது, சமத்துவ சமூகநீதி மக்கள் கழகம் என்ற கட்சியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

காசியாபுரம் தனித் தொகுதி எம்.எல்.ஏவான மாமன்னன், சாதி ரீதியாக சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒடுக்கப்படுகிறார். அதை மீறி எப்படி உயரிய இடத்துக்குப் போகிறார் என்பதே மாமன்னன் படத்தின் கதை. மாமன்னன் படத்தில் வடிவேலு சபாநாயகர் பதவியில் அமர்வது போல் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அதிமுகவினர், முன்னாள் சபாநாயகர் ப.தனபாலை இக்காட்சி நினைவு படுத்துகிறது என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக மாமன்னன் படத்தை அதிமுகவினரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மாமன்னன் படம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதாவது, மாமன்னன் திரைப்படம் முன்னாள் சபாநாயகரை ஒட்டி இருப்பதாகவும் இந்த கதை அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் சொல்கிறார்களே என கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மாமன்னன் படத்தை எடுத்த இயக்குனர் மாரி செல்வராஜின் பேட்டியை நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகத்தான் பார்த்தேன். மாமன்னன் என்னுடைய தந்தை கேரக்டர் என்று மாரி செல்வராஜ் சொல்லியிருக்கிறார்.
எனது தந்தையை மையமாக வைத்துதான் இந்த படத்தை நான் இயக்கினேன் என்று மாரி செல்வராஜ் சொல்கிறார். அப்படியென்றால் இதில் எதை எடுத்துக்கொள்வது... மாமன்னன் கேரக்டர் என்னுடைய தந்தை கேரக்டர் என்று மாரி செல்வராஜ் சொல்கிறார்... நீங்க சொல்வது ஒரு மாதிரியாக உள்ளது. நீங்கள் சொல்வது படியே பார்த்தால்.. நீங்கள் யாரை குறிவைத்து சொல்கிறீர்கள் என்றும் தெரியும். அப்போது யார் மாவட்ட செயலாளராக இருந்தார் என்று சமூக வலைத்தளத்திலும் ஒரு செய்தி பரவுது... அந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications