ஸ்டாலினின் சூப்பர் சர்ப்ரைஸ்.. அன்றே குஷியான காங்கிரஸ்.. துள்ளி குதிக்கும் திமுக.. கவனிக்கும் பாஜக
சென்னை: 3வது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கேசிஆரின் கனவை, அடித்து நொறுக்கி தெலுங்கானாவில் முன்னேறி வருகிறது காங்கிரஸ்.. இது திமுகவுக்கு பெருமகிழ்ச்சியை தந்து வருகிறது.
தேசிய பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், அன்றைய தினம் சந்திரபாபு நாயுடு முயற்சித்தார்.. இதற்கு பல்வேறு மாநில தலைவர்கள் ஆதரவு தந்தனர் என்றாலும், ஒருசில காரணங்களால், அந்த முயற்சி நின்றுவிட்டது.

பாஜக: இதற்கு அடுத்தபடியாக, மம்தா பானர்ஜியும், இதே போன்ற கூட்டணியை முன்னெடுத்தார்.. இவருக்கும், மேலிட காங்கிரசுடன் சில மோதல் ஏற்பட்டு, இந்த முயற்சியும் அப்படியே தேங்கிவிட்டது.
இதற்கு அடுத்தபடியாக, பாஜக மற்றும் காங்கிரஸ் தவிர்த்து மாநில கட்சிகள் ஒன்றாக இணைந்து மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் பணியில் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் ஈடுபட்டார். எம்பி தேர்தலுக்கு முன்பே, இந்த முயற்சியில் சந்திரசேகர் ராவ் இறங்கியது, தேசிய அளவில் கவனத்தை திருப்பியது. இதற்காக, பல அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கேசிஆர்: அந்தவகையில், நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து பேசி ஆதரவு கேட்டார்.. இந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடந்தது.. ஆனால், பாஜகவுக்கு எதிரான "இந்தியா கூட்டணி" உருவான நிலையில், கேசிஆர் அந்த கூட்டணியில் இடம்பெறவிலை. "நாம் எல்லோரும் சேர்ந்து பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கேசிஆர் பலமுறை பேசியிருந்தபோதும்கூட, இந்தியா கூட்டணியில் இடம்பெறவில்லை.
தேசிய அளவில் தன்னை முன்னிறுத்தி கொள்ள வேண்டும் என்ற ஆசை, கேசிஆருக்கு அதிகமாகவே இருந்தாலும்கூட, இந்தியா கூட்டணியில் அவர் இணைய தயக்கம் காட்டியதை, காங்கிரஸ் விமர்சிக்க தவறவில்லை. பாஜகவுடன் மறைமுக உறவு கேசிஆருக்கு இருப்பதாக, பொதுவெளியில் அம்பலப்படுத்தி கொண்டேயிருந்தது காங்கிரஸ்.
யாருக்கு ஆதரவு: இப்படிப்பட்ட சூழலில்தான், தெலுங்கானா தேர்தல் தீவிரமெடுத்தது.. 3வது முறையாக ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று கேசிஆரும், இந்த முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரசும் முனைப்பு காட்டின. எனவே, இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால், தமிழகத்தில் ஆளும்கட்சியாக உள்ள திமுக, இதில் யாருக்கு ஆதரவு தெரிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கேசிஆருடன் ஸ்டாலினுக்கு நெருக்கம் இருந்தநிலையில், இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகமானது.. எனவே, நெருக்கமான நட்புக்கு ஆதரவு தருவாரா? அல்லது இந்தியா கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவாரா? என்ற ஆர்வம் எகிறியது. இறுதியில், காங்கிரசுக்கு ஆதரவை தந்து, கேசிஆருக்கு அதிர்ச்சியையும் தந்து, தன்னுடைய நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்..
மகிழ்ச்சி: இன்றைய தினம் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி முகாமை எட்டிப்பிடித்துள்ளது. இது திமுகவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன், இந்தியா கூட்டணி + திமுக கூட்டணி என்ற 2 விதத்திலும் கூட்டணி வைத்துள்ள நிலையில், இரட்டி மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கிறது திமுக.. தெலுங்கானாவில் காங்கிரஸின் வெற்றியானது, கூடுதல் நம்பிக்கையும், தெம்பையும் திமுகவுக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..!!!












Click it and Unblock the Notifications