கலாஷேத்ரா..தவறான தகவல் பரப்பாதீர்கள்..கூடுதல் ஆணையர் வேண்டுகோள்..மாநில மகளிர் ஆணைய தலைவர் விசாரணை
சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். பாலியல் புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் வரவில்லை. புகார் வந்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரேம் ஆனந்த் சின்கா கூறியுள்ளார்.
சென்னை, திருவான்மியூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளை நிறுவனம் உள்ளது. இது 1936ம் ஆண்டு ருக்மணிதேவி அருண்டேல் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு இதனை தன்னாட்சி அமைப்பாக அறிவித்தது. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.

இங்கு பேராசிரியர் ஒருவர் நீண்ட நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக அந்நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். ஆனால், நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்ததால்,சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றசாட்டுகளை பதிவு செய்தனர்.
இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கலாஷேத்ராவை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி என கூறப்படும் ஒரு பெண், தனது பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்று பேராசிரியர் மீது தவறாக பாலியல் புகார் அளித்துள்ளனர் என மனு அளித்திருந்தார்.
இந்த மனுவின் அடிப்படையில், விசாரணை நடத்திய பிறகு, அங்கு பாலியல் தொந்தரவு யாருக்கும் நடக்கவில்லை என்று, தேசிய மகளிர் ஆணையம் காவல்துறை விசாரணைக்கான உத்தரவை வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் தொடர்ந்து புகார் அளித்தும், சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டும், விசாரணை நடத்த வேண்டிய தேசிய மகளிர் ஆணையம் திடீரென புகாரை வாபஸ் பெற்றது, மாணவிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக பணியாற்றி வருவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயங்குவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்ககோரி நேற்று கலாஷேத்ராவில் பயிலும் மாணவிகள் அனைவரும், கைகளில் பதாகைகளை ஏந்தி, நேற்று 10 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராசிரியர் மீது முறையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் உறுதியான பதில் அளிக்காத நிலையில் போராட்டம் தொடரும் என மாணவிகள் தரப்பில் நேற்று இரவு தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். இதனையடுத்து கலாஷேத்ரா நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அரசுக்கு திருவான்மியூர் கலாஷேத்ரா மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் 'கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு 4 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்து வருகின்றனர். அவர்களை கல்லூரி இயக்குனர்கள் மற்றும் நடன துறை தலைவர் காப்பாற்றி வருகின்றனர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனவும் மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே கலாஷேத்ராவில் மாணவிகள் போரட்டம் நடத்தும் நிலையில் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் இருந்து இதுவரை பாலியல் புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் வரவில்லை. புகார் வந்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கலாஷேத்ரா விவகாரம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் பிரேம் ஆனந்த் சின்ஹா கேட்டுக்கொண்டுள்ளனார்.
இதனிடையே கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி நேரில் விசாரணை நடத்தி வருகிறார். பேராசிரியர்கள் நான்கு பேரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications