கோவை டூ பெங்களூர்.. இனி தடையில்லாமல் போகலாம்! அமலுக்கு வந்த தெற்கு ரயில்வேயின் லேட்டஸ்ட் அறிவிப்பு
சென்னை: கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், இன்று முதல் வாரத்தில் ஏழு நாட்களும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியது பெங்களூர். அதேபோல், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமையை கோவை பெற்றுள்ளது. பல்வேறு தொழில்கள் நிறைந்த இந்த இரு நகரங்களுக்கு இடையே போக்குவரத்து என்பது அதிகமாக இருக்கும்.

தொழில் நிமித்தமாகவும் பணி நிமித்தமாகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில், பேருந்துகள், விமானங்கள் மூலமாக கோவை - பெங்களூர் இடையே பயணம் செய்து வருகிறார்கள். இதனால், கோவை - பெங்களூர் இடையேயான ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும். கோவை - பெங்களூர் இடையே உதய் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
வாரத்தின் 7 நாட்களிலும்: கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காலையில் கோவையில் இருந்து கிளம்பும் இந்த ரயில் தான் கோவை மக்கள் பெங்களூர் செல்லவும், பெங்களூரில் இருந்து கோவை வரவும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சாமானிய, ஏழை எளிய மக்கள் விரும்பி பயன்படுத்தும் ரயிலாக உதய் எக்ஸ்பிரஸ் வாரத்தில் 6 நாட்கள் ஓடுகிறது.
இந்த நிலையில் தான் கோவை - பெங்களூர் இடையிலான உதய் எக்ஸ் பிரஸ் ரயில் வரும் மார்ச் 5-ம் தேதி(இன்று) முதல் தினந்தோறும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரயில்வே கூறுகையில், "வண்டி எண் 22666 / 22665 கோவை - பெங்களூர் இடையிலான உதய் விரைவு ரயில் சேவை வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்படுவது இல்லை.
பயணிகள் மகிழ்ச்சி: உதய் விரைவு ரயில் சேவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை - பெங்களூர் இடையேயான உதய் விரைவு ரயில் மார்ச் 5-ஆம் தேதி முதல் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும். கோவையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நண்பகல் 12.30 மணிக்கு பெங்களூர் நகரம் சென்றடையும்.
மறுமார்க்கமாக பெங்களூரில் இருந்து பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை வந்து சேரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை - பெங்களூர் இடையே தினமும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருப்பது பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications