நீயா நானாவில் வடமாநிலத்து பெண் பாராட்டும் ஆபரேஷன்.. விதை கருணாநிதி போட்டது.. பழைய வீடியோ டிரென்ட்
சென்னை: தனது மகனுக்கு தமிழகத்தில் இலவசமாக காக்லியர் ஆபரேஷன் செய்யப்பட்டதால்தான் காது கேட்பதாக நீயா நானாவில் வடமாநிலத்து பெண் ஒருவர் பெருமிதம் பொங்க கூறிய நிலையில் டாக்டர் காமேஸ்வரன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
இலவச கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்டவை ஒரு மாநில மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரணம் படிக்க கட்டணமின்றி எந்த ஒரு குழந்தையும் படிக்காமல் இருந்து விடக் கூடாது என்பது!
அது போல் காசு இல்லாமல் மருத்துவம் பார்க்க வசதியின்றி யாரும் எந்த உயிரும் பலியாகக் கூடாது என்பதுதான். இவையெல்லாம் தன் குடிமக்களுக்கு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமைாகும்.

இலவசங்கள்
அந்த வகையில் இது போன்ற இலவசங்கள் சொந்த மாநிலத்து மக்களுக்கு பயன் அடைவதை போல் வேறு மாநிலத்து மக்களுக்கு பயன் அடைந்தால் அது நிச்சயம் அந்த மாநிலத்திற்குத்தானே பெருமை? அத்தகைய பெருமையைத்தான் நம் தமிழகம் பெற்றுள்ளது. நீயா நானா நிகழ்ச்சியில் வடமாநிலத்து தொழிலாளி வெர்சஸ் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது.

தமிழகம்
இந்த விவாதத்தில் தமிழகம் குறித்து நீங்கள் பெருமைப்படும் விஷயம் என்ன என்ற கேள்வியை கோபிநாத் எழுப்பினார். அதற்கு வடமாநிலத்து பெண் ஒருவர், தனது மகனுக்கு ஒரு வயதில் காது கேட்காமலும் வாய் பேச முடியாமலும் இருந்தது. அப்போது கோவையில் ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது எல்லா பரிசோதனையும் எடுக்கப்பட்டது.

காது கேட்கவில்லை
இதன் முடிவில் காது கேட்கவில்லை, வாய் பேச முடியாது என மருத்துவர் தெரிவித்தார். இந்த நிலையில் இதற்கு வழி ஏதும் உண்டா என கேட்டேன். அதற்கு அவர் ரேஷன் கார்டு இருக்கிறதா, தமிழகத்தில் ரேஷன் கார்டு இருந்தால் உங்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து தரப்படும் என்றார்.

4 ஆண்டுகள்
இதற்காக 4 வருடங்கள் நடையாய் நடந்து ஒரு வழியாக ரேஷன் கார்டை பெற்று பின்னர் அதை வைத்து ஆபரேஷன் செய்தேன். இன்று என் மகன் அம்மா, அப்பா, அக்கா என எல்லாவற்றையும் கூறி அழைக்கிறான். இதற்கு தமிழக அரசுக்கு மிக்க நன்றி என்றும் அந்த பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார். இவர் சொல்லும் முதல்வர் காப்பீடு திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

கருணாநிதி
அந்த திட்டமானது கடந்த 2006- 2011 ஆம் ஆண்டு அவர் ஆட்சியில் இருந்த போது தொடங்கப்பட்டது. இன்று பல பெயர்களில் பல வசதிகளுடன் அடங்கிய அட்டை கிடைக்கப்பெற்றாலும் அதற்கு விதை போட்டது முன்னாள் முதல்வர் கருணாநிதி என அவர் குறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காது மூக்கு தொண்டை மருத்துவர்
அந்த வீடியோவில் காது , மூக்கு, தொண்டை பிரிவின் டாக்டர் காமேஸ்வரன் ஒரு விழாவில் பேசுகையில் கருணாநிதி என்னிடம் உனக்கு எதுவும் வேண்டாமா, என்னிடம் எதுவும் கேட்க மாட்டேங்கிறியே என்றார். எனக்கு ஒன்று வேண்டும், உங்களிடம் கேட்க பயமாக இருக்கிறது என கூறினேன். அதற்கு கருணாநிதி என்ன விஷயம் சொல்லு என்றார்.
|
வீடியோ
எனக்கு ஒரு Cochlear implant வேண்டும் என்றேன். அப்படின்னா என்ன என கேட்டார். அதற்கு நான் உடனே கையில் உள்ள லேப்டாப் மூலம் வீடியோவாக அவரிடம் காண்பித்தேன். அதில் ஒரு அழகான குழந்தை தான் என்ன சாப்பிட்டேன் என்பதை சைகை மொழியில் பேசிக் கொண்டிருக்கிறது. மறு பக்கம் இன்னொரு குழந்தை போனில் அவருடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறது. அப்போது கலைஞரிடம் நான் சொன்னேன், இந்த இரு குழந்தைகளும் பிறவியிலேயே வாய் பேச முடியாத, பிறவியிலேயே காது கேட்காத குழந்தைகள் என்றேன். தற்போது வீடியோவில் பேசி கொண்டிருக்கும் குழந்தைக்கு காக்லியர் இன்பிளாண்ட் செய்தோம். இன்னொரு குழந்தைக்கு காக்லியர் இன்பிளாண்ட் செய்ய முடியவில்லை என்றேன்.

பணம் இல்லை
ஏன் என கேட்டார். பணம் இல்லை என்றேன், எவ்வளவு பணம் வேண்டும் என்றார். ஒரு காக்லியர் இம்பிளாண்ட் அந்த காலத்தில் ரூ 6 லட்சம். அவ்வளவுதானே பண்ணுங்க என்றார், பணம் கொடுங்க அய்யா என்றேன். கண்டிப்பா கொடுக்கிறேன் என்றார். அன்று தான் இந்தியாவில் முதல்முறையாக காக்லியர் இன்பிளாண்ட் திட்டம் தொடங்கியது. இதன்மூலம் 2000 குழந்தைகளுக்கு இந்த இன்பிளாண்ட் செய்துள்ளோம்.

ஜெனீவாவில் கை தட்டல்
ஜெனீவாவில் காக்லியர் இன்பிளாண்ட் குறித்த புரட்சி குறித்து பேசுவதற்கு அவருடைய போட்டோவைதான் போட்டேன். இவர்தான் இந்த ஒட்டுமொத்த திட்டத்தையே தொடங்கி வைத்தவர் என்றேன். உடனே அங்கிருந்தவர்கள் எழுந்து நின்று கை தட்டினார்கள். இவ்வாறு டாக்டர் காமேஸ்வரன் பேசிய வீடியோவும் அந்த வடமாநிலத்து பெண் போட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications