அழைப்பிதழில் பெயர் போட்டும் அமைச்சர்கள் வரவில்லை! வருந்திய திருநாவுக்கரசு! சமாதானம் செய்த ஸ்டாலின்!
சென்னை: தனது மகன் திருமண அழைப்பிதழில் பெயர் போடப்பட்டும் அமைச்சர்கள் பலரும் திருமண விழாவுக்கு வராததை ஸ்டாலினிடம் நேரடியாக ஓபன் ஸ்டேஜில் சுட்டிக்காட்டி, வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு.
''நீங்கள் வருத்தப்பட வேண்டாம்... எல்லோருக்கும் சேர்த்துதான் நான் வந்திருக்கிறேனே, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்'' எனக் கூறி திருநாவுக்கரசை சமாதானம் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு இல்ல திருமண விழாவில் இது தொடர்பாக முதல்வர் பேசியதாவது;

''அண்ணன் திருநாவுக்கரசு எப்பொழுதும் - எதையுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். உள்ளொன்று வைத்து வெளியொன்று பேச மாட்டார். அதனால்தான் நன்றியுரை ஆற்றுகிறபோது இந்த அழைப்பிதழில் வெளியிடப்பட்டிருக்கக் கூடியவர்கள் பெரும்பாலும் வரவில்லை என்பதை மனதில் ஏற்றுக்கொண்டு அந்த வருத்தத்தை கொஞ்சம் இங்கு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். ''
''அவர் எனக்கு சால்வை அணிவித்தபோது, பட்டாடை அணிவித்தபோது நான் சொன்னேன். "நீங்கள் வருத்தப்பட வேண்டாம்... எல்லோருக்கும் சேர்த்துதான் நாங்கள் வந்திருக்கிறோமே, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்". சரி... சரி என்று தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அது மட்டுமல்ல, இன்றைக்குத் திருமண நிகழ்ச்சிகள் நிரம்ப நடந்து கொண்டிருக்கிறது. பல அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பல நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி அவர்களும் சென்றிருக்கிறார்கள்.''
''அது மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சியும் இருக்கிறது. கவலைப்படாதீர்கள்... வராதவர்கள் எல்லாம் மாலையில் வருவார்கள்... மணமக்களை வாழ்த்துவார்கள். நீங்களே இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கிறீர்கள். அதனால் அவர் கவலைப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.''
''இதுவரை கணக்கெடுத்துப் பார்த்தீர்கள் என்றால் 4000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர் நம்முடைய அண்ணன் திருநாவுக்கரசு.
திராவிட இயக்கத்தையோ, கலைஞரைப் பற்றியோ யாராவது லேசாக விமர்சித்தால் போதும், பொறுத்துக் கொள்ள மாட்டார் அண்ணன் திருநாவுக்கரசு. உடனே அதற்குத் தகுந்த பதிலை, தகுந்த விமர்சனத்தை எழுதினால்தான் அவருக்கு நிம்மதி வரும். அதனால்தான் திராவிட இயக்கத்தின் தீரர் என்று இன்றைக்கு நம்மால் அவர் அழைக்கப்படுகிறார். ''












Click it and Unblock the Notifications