பாஜக ஆளும் மாநிலங்கள் பூராவும் போதைப்பொருள் தான்.. அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!
சென்னை: பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் பூராவும் அப்படித்தான் இருக்கிறது. இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் அதிமுக சார்பில் ரமலான் இப்தார் நோன்பு திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நோன்பு திறந்தார். இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அண்மையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணியில் பொறுப்பில் உள்ளவர். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரையும் சந்தித்து நிதி கொடுத்துள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. காவல்துறை அதிகாரிகளிடமும் நெருக்கம் காட்டியுள்ளார். போதைப் பொருள் கடத்தியவரைக் கைது செய்துள்ளனர். அவரை விசாரணை செய்து முழு விவரங்களை வெளியிட வேண்டும்.
இதுதொடர்பாக முதலமைச்சரை பலமுறை வலியுறுத்தி உள்ளேன். இதுவரை போதை பொருள் தொடர்பாக ஒரு அறிக்கை கூட முதலமைச்சர் வெளியிடவில்லை. மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தமிழ்நாட்டில் வந்து போதை பொருள் புழக்கத்தை கண்டு பிடித்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் தமிழ்நாடு காவல்துறை தூங்குகிறதா?" எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை விமர்சிப்பதோடு டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்தியதாக அதிமுகவை விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் பூராவும் அப்படித்தான் இருக்கிறது. இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது அதிமுக ஆட்சியில் தான். இன்றைக்கு தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் நடமாட்டம். இந்த 15 நாட்களில் எந்தெந்த இடங்களில் எல்லாம் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று பாருங்கள். இதனால் பாதிக்கப்படுவது நம் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் தான்.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் 2,138 பேர் கஞ்சா விற்றதாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. கஞ்சா விற்றது கண்டுபிடிக்கப்பட்டாலே அவர்கள் குற்றவாளி தானே? ஏன் கைது செய்யவில்லை. எல்லாம் திமுக காரர்கள். அதனால் தான் போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்க முடியவில்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன" எனக் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications