ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ-யை தாக்கிய இளம்பெண்.. சென்னையில் பரபரப்பு! என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் காவல்துறை பெண் எஸ்.ஐ கலைச்செல்வி மீது மது போதையில் இருந்த பெண் ஒருவர் தாக்குதல் நடத்தி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான போலீஸ் எஸ்.ஐ கலைச்செல்வி அண்மையில் ஒரு ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை டி.பி சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த சீதா என்ற இளம்பெண் ஒருவர் மதுபோதையில் தனது 6 வயது குழந்தையை பொது இடத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவதாகவும், அரை நிர்வாணத்தோடு பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து டி.பி சத்திரம் உதவி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது, மது போதையில் அரை நிர்வாணமாக இருந்த பெண்ணை அருகில் இருந்த பெண்களிடம் இருந்து உடை வாங்கி அவருக்கு கொடுத்ததோடு, அவரிடம் இருந்து 6 வயது குழந்தையை மீட்க முயன்றுள்ளார்.
அப்போது திடீரென அந்த இளம்பெண், உதவி காவல் ஆய்வாளர் கலைச்செல்வியை தாக்கியுள்ளார். இதில் பெண் எஸ்.ஐ கலைச்செல்வியின் முகத்தில் நகக் கீறல், வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றார்.

இந்தச் சம்பவம் குறித்து டி.பி சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் டிபி சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.ஐ-யை தாக்கிய அந்தப் பெண்ணை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான உதவி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி அண்மையில், டிபி சத்திரம் பகுதியில் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரோகித் ராஜ் என்ற ரவுடியை சுட்டுப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவுடியை சுட்டுப் பிடித்ததற்காக காவல் ஆணையர் அருணிடம் பாராட்டையும் பெற்றிருந்தார். இந்தச் சூழலில் ஒரு பெண்ணால் அவர் தாக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications