மாரத்தான் போட்டி..சண்டே மெரினா பீச் போறீங்களா? இதை படிச்சிட்டு போங்க.. டிராபிக் போலீஸ் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி சென்னையில் நாளை நடைபெறுகிறது. எனவே மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமையில் குறிப்பிட்ட நேரம் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. எனவே ஆகஸ்ட் 4, 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நேப்பியர் பாலத்திலிருந்து போர் நினைவுச் சின்னம் வரை காமராஜர் சாலையிலும், போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி நாளை நடைபெறுவதால் மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வெளியிட்ட அறிவிப்பில், "4வது சர்வதேச கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமையான நாளை (ஆகஸ்ட் 6) அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி 5 கி.மீ, 10 கி.மீ, 21.1 கி.மீ, மற்றும் 42.2 கி.மீ என 4 பிரிவுகளில் நடைபெற உள்ளது.
அனைத்துப் பிரிவுகளும் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தொடங்கி, தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைகிறது. இதனால் இந்த பகுதியில் நாளை அதிகாலை 3 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அந்த நேரத்தில் ராஜாஜி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக பாரிமுனை சந்திப்பு, என்.ஃ எப்.எஸ்.சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, அண்ணா சாலையில் வெலிங்டன் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வாலாஜா சந்திப்பில் இருந்து அண்ணா சிலை சந்திப்பு வரை உள்ள வலதுபுற சாலை இருவழிப் பாதையாக செயல்படும். வாகனங்கள் அண்ணா சிலையில் இருந்து வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் பெரியார் சிலை, பாட்டா சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். அதேபோல, பாரதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, லாயிட்ஸ் சாலை ஆகியவற்றில் இருந்து வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் ஐஸ் ஹவுஸ் ஜங்சன், ரத்னா கஃபே வழியாக திருப்பி விடப்பட்டு, டாக்டர் நடேசன் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.

மேலும், சாந்தோம் நெடுஞ்சாலையை பொறுத்த அளவில், சாந்தோம் நெடுஞ்சாலையிலிருந்து வரும் வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை, காரணீஸ்வரர் பக்கோடா தெரு சந்திப்பில் திருப்பப்பட்டு, டாக்டர் நடேசன் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். மியூசிக் அகாடெமியில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு, வி.எம்.சாலை வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ராமகிருஷ்ண மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
இது தவிர அண்ணா சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து அண்ணா சிலை செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள், ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து பின்னி சாலை, மார்ஷல் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்" என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications