வெள்ளத்தில் தத்தளிக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி! திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் தள்ளி வைப்பு
சென்னை: சேலத்தில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை வெள்ளத்தால் ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பால் மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுகவில் மிக முக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பது இளைஞரணி. முதல்வர் ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது தான் இந்த இளைஞரணி. கடந்த 1980 ஆம் ஆண்டு இந்த அணி தொடங்கப்பட்டது. எனினும், கடந்த 2007 ஆம் ஆண்டு தான் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் சேலத்தில் மும்முரமாக நடைபெற்று வந்தது. இம்மாநாட்டினை மிக பிரமாண்டமாக நடத்த திமுக இளைஞரணி செயலாளரும், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார். இந்த மாநாடு அதிமுகவின் கோட்டை எனப்படும் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் தான் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு டிசம்பர் 17 ஆம் தேதி அதாவது நேற்று நடைபெற இருந்தது. இந்த நிலையில், கடந்த 4ம் தேதி சென்னையில் மிக்ஜாம்புயலால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டது. அதாவது வரும் 24 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் சேலத்தில் நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் அங்குள்ள முக்கிய இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முடங்கிய நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள் வெள்ள பாதிப்பு காரணமாக மீண்டும் சேலத்தில் நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications