மதிமுகவின் முதன்மை செயலாளராகிறாரா துரை வைகோ? கணேசமூர்த்தி, திருப்பூர் துரைசாமியின் பதவி பறிப்பா?
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அக்கட்சியின் முதன்மை செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார் என்ற தகவல்கள் வெளியாகின.
திமுகவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போர்வாளாக இருந்தவர் வைகோ. இவர் அக்கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி மதிமுக என்ற புதிய கட்சியை ஏன் தொடங்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

ஆனால் எந்தவிஷயத்திற்காக திமுக தலைவர் மறைந்த கருணாநிதியை வைகோ எதிர்த்தாரோ தற்போது அதே விஷயத்திற்காக அவரை மதிமுக மூத்த நிர்வாகிகள் எதிர்த்து வருகிறார்கள்.
2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என வைகோ கூறியிருந்தார். இந்த நிலையில் தொண்டர்கள் விருப்பப்படுவதாகவும் தன் மகன் அரசியலுக்கு வருவதை துளியும் விரும்பவில்லை என வைகோ கூறிய நிலையில் துரை வைகோவிற்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என்ற மதிமுகவினர் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி துரைவைகோவுக்கு தலைமை கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதற்கு மதிமுகவில் மூத்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சிலர் வைகோ திமுகவிலிருந்து விலகியது ஏன் தற்போது இவர் செய்வது மட்டும் சரியா என கேட்டு கடிதங்களை எழுதியிருந்தனர். இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
திருப்பூர் துரைசாமி ஏற்கெனவே 4 முறை கடிதம் எழுதியும் ஏன் பதில் தரவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து துரை வைகோ டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் திமுகவுடன் மதிமுகவை இணைக்க தொண்டர்களுக்கு இஷ்டம் இல்லை. கூட்டணியில் இருந்தாலும் எங்களுக்கென தனி கொள்கை உள்ளது. துரைசாமி மூத்தவர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என துரை வைகோ கூறியிருந்தார்.
இதுகுறித்து துரைசாமி கூறுகையில் துரை வைகோ சின்னப்பையன், நான் வைகோவின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்றார். இது குறித்து மீண்டும் துரை வைகோ கூறுகையில், மதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் துரைசாமியை நீக்குவது குறித்து ஜூனில் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். துரைசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பொதுச் செயலாளர் வைகோ பதில் அளிக்கப்பார். துரைசாமி மீது நடவடிக்கை குறித்து யோசிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மதிமுகவின் பொருளாளராக இருக்கும் கணேசமூர்த்தி அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ஜூன் 14 ஆம் தேதி மதிமுக பொதுக் குழு கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஜூன் 1 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தில் மதிமுகவின் பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு செய்யப்படுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வைகோவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளை கூறி வரும் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமியின் பதவியை பறித்துவிட்டு அந்த பதவிக்கு கோவை ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.
அது போல் மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் துரை வைகோவுக்கு முதன்மை செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி அதில் துரை வைகோவை அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மதிமுகவில் பொருளாளராக உள்ள கணேசமூர்த்தியை அந்த பதவியிலிருந்து விடுவித்துவிட்டு புதிய பொருளாளரை தேர்வு செய்யலாம் என்ற யோசனையில் வைகோ இருந்து வருவதாக தெரிகிறது. ஏற்கெனவே தலைமை நிலையச் செயலாளர் பதவி கொடுத்ததற்கே மதிமுகவில் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். தற்போது முதன்மைச் செயலாளர் பதவியை கொடுத்தால் என்னவாகுமோ?












Click it and Unblock the Notifications