மோதல் ஓவர் ஓவர்! சமாதானம் செய்த வைகோ! கட்டுப்பட்ட மல்லை சத்யா! ராஜினாமாவை வாபஸ் பெற்ற துரை வைகோ
சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றார். மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சமாதான பேச்சு நடத்திய நிலையில் துரை வைகோ ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார்.
இதனால் மதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராகவே கட்சி பதவியை துறந்ததாக மறைமுகமாக துரை வைகோ கூறியிருந்தார்.

இந்த நிலையில் பொதுச் செயலாளர் வைகோவின் சேனாதிபதி நான் என மல்லை சத்யா அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக எம்பி துரை வைகோ கூறியிருப்பதாவது: வைகோவுக்கு மல்லை சத்யா மட்டும் சேனாதிபதியில்லை. அவர் மட்டுமே வைகோவின் சேனாதிபதி என சொந்தம் கொண்டாட முடியாது.
மதிமுக முதன்மை செயலாளர்
மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து நான் விலகியதில் மாற்றம் இல்லை. மதிமுகவுக்காகவும் வைகோவுக்காகவும் உழைத்த தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏராளமானோர் இருக்கிறார்கள் என துரை வைகோ கூறியிருந்தார். மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். நேற்றைய தினம் வைகோவை துரை வைகோவும் இன்று காலை வைகோவை மல்லை சத்யாவும் சந்தித்திருந்தனர். அப்போதே சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியது தெரியவந்தது.
9 தீர்மானங்கள்
இந்த நிலையில் மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மான அறிக்கையில் முதன்மை செயலாளர் துரை வைகோ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்க கட்சி தலைமை மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மல்லை சத்யா
இந்த நிலையில் மல்லை சத்யா கூட்டத்தில் பேசுகையில் நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியை விட்டு விலக்கி விடுங்கள். துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். கடைசி வரை வைகோ தொண்டனாக இருந்து விட்டுப் போகிறேன். துரை வைகோ அரசியல் வரவேண்டும் என்று முதன் முதலில் கூறியது நான்தான்.
கட்சி விரோத நடவடிக்கைகள்
கட்சி விரோத நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. அப்படி ஏதாவது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை நிரூபித்தால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பேசுவது தான் இங்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
துரை வைகோ
இந்த நிலையில் துரை வைகோ பேசுகையில் கட்சி நலனுக்காகத்தான் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தேன். தொண்டர்கள், நிர்வாகிகள் வற்புறுத்தல் காரணமாக தான் நான் கட்சி பணிகளில் செயல்பட தொடங்கினேன். மதிமுக தொண்டர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் செயல்பட்டு வருகிறேன் என பேசினார்.
மல்லை சத்யா- துரை வைகோ சமாதானம்
இந்த நிலையில் துரை வைகோவையும் மல்லை சத்யாவையும் வைகோ சமாதானப்படுத்திவிட்டதாக தெரிகிறது. மேலும் இருவரும் கட்சி பணிகளை தொடருமாறும் வைகோ அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து ராஜினாமா முடிவை வாபஸ் பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications