ஏன் இவ்வளவு வித்தியாசம்.. இடிக்குதே?.. விசாரித்த ஸ்டாலின்.. திரட்டப்பட்ட ஆதாரம்.. சிக்கும் புள்ளி?
சென்னை: சென்னையில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட உள் விளையாட்டரங்கம் ஒன்றை பற்றிய விசாரணையை முதல்வர் ஸ்டாலின் முடுக்கிவிட்டு இருக்கிறார். முதல்வரின் நேரடி உத்தரவின் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை இந்த விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு முதல்வராக இருக்கும் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது தனது தொகுதியில் முக்கியமான பல நலத்திட்டங்களை செய்து இருக்கிறார். இதில் கொளத்தூரில் கட்டப்பட்ட உள் விளையாட்டரங்கம் அதிக கவனம் பெற்றது.
மிக குறைந்த செலவிலேயே கட்டி முடிக்கப்பட்ட இந்த இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் இப்போது பயன்பாட்டில் உள்ளது. கொரோனா காலம் தவிர்த்து மற்ற நாட்களில் இங்கு மக்கள் பலர் வருவது வழக்கம்.

எப்படி
இந்த உள்விளையாட்டு அரங்கம் கட்ட 33 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் கடந்த அதிமுக ஆட்சியில் தி.நகர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்தியநாராயணன் முறைகேட்டு புகார் ஒன்றில் சிக்கி உள்ளார். கொளத்தூரில் கட்டப்பட்டது போலவே இவரும் உள் விளையாட்டரங்கம் கட்டப்போவதாக அறிவித்து இருந்தார்.

கட்டுமானம்
சத்தியநாராயணன் அறிவித்தது போலவே கடந்த 2016ல் தி நகரில் உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன. இந்த அரங்கத்திற்காக அடித்தளம் அமைப்பதற்காக 23 லட்சத்து 73 ஆயிரத்து 900 ரூபாய் செய்துள்ளார். பின் மீண்டும் தரைத்தளம் அமைக்க 18 லட்சத்து 83 ஆயிரம், அதன்பின் மரத்தால் ஆன தளம் அமைக்க 21 லட்சத்து 11 ஆயிரம், மேற்கூரை அமைக்க 18 லட்சம் என்று அடுத்தடுத்து செலவு செய்துள்ளார்.

மொத்த செலவு
மொத்தமாக எல்லா பணிகளையும் முடிக்க 1.1 கோடி ரூபாயை சத்தியநாராயணன் செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டி உள்ளார். கொளத்தூரில் வெறும் 33 லட்சத்தில் திட்டம் முடிக்கப்பட்ட நிலையில் இவர் 1 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். கடந்த ஜனவரியில் இந்த செலவு குறித்த ஆர்டிஐ விவரங்கள் வெளியான நிலையில், தற்போது மாஜி சத்தியநாராயணன் மீதான புகார்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக சமூக ஆர்வலர்களும், ஆர்டிஐ ஆர்வலர்களும் புகார் கொடுத்து இருந்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இது தொடர்பாக ஆதாரங்களுடன் விவரங்கள் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், சென்னை ஹைகோர்ட்டில் சத்தியநாராயணனுக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் சத்தியநாராயணனுக்கு எதிரான புகாரை விரைந்து விசாரிக்கும்படி முதல்வர் ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரவு
கொளத்தூரில் கட்டியது போலவேதான் அவரும் உள்விளையாட்டு அரங்கம் கட்டி இருக்கிறார். ஆனால் கொளத்தூர் அரங்கிற்கு 33 லட்சம் மட்டுமே செலவு ஆன நிலையில் அவர் ஏன் 1 கோடிக்கும் அதிகமாக செலவு செய்தார், ஏன் இரண்டுக்கும் இவ்வளவு வித்தியாசம், இது பெரிய முறைகேடு, உடனே விசாரியுங்கள் என்று முதல்வர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது.

விசாரணை
இதையடுத்து சத்யநாராயணனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரபூர்வமாக விசாரணையை தொடங்கி உள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் விசாரணையை தொடங்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் அளிக்க உள்ளதாம். விரைவில் அதிமுக மாஜி எம்எல்ஏ சத்தியநாராயணன் விஜிலன்ஸ் மூலம் நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications