தந்தை பெரியார் மீது அவதூறு- நடிகர் ரஜினிகாந்த் மீது தி.வி.க. மீண்டும் வழக்கு
சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறு பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ல் சேலத்தில் பெரியார் தலைமையிலான மாநாட்டில் ராமர் படம் செருப்பால் அடிக்கப்பட்டது; ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக கொண்டுவரப்பட்டன என பேசியிருந்தார்.

ரஜினிகாந்த் இப்படி பேசியது உண்மைக்கு புறம்பானது; தவறான தகவல் என திராவிடர் இயக்கத்தினர் மறுத்தனர். இதனால் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தாம் பேசியது சரியே என்பதால் மன்னிப்பு கேட்கவே முடியாது என கூறினார்.
இதற்கு ஆதாரமாக அவுட்லுக் இதழில் வெளியான ஒரு கட்டுரையையும் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார். இதுவும் மிகப் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் தந்தை பெரியாரை அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகத்தின் பல நகரங்களில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தந்தை பெரியார் மிகப் பெரும் தலைவர்; அவரை அவதூறாக பேசியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியது. மேலும் ரஜினிகாந்த் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அவகாசம் கொடுத்துவிட்டு மீண்டும் வழக்கு தொடரலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
இதனால் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அப்போது மனுவை திரும்பப் பெற்றனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் மெட்ரோபாலிடன் 2-வது நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இம்மனு மீது வரும் 7-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
இதுதான் விடாது கருப்பு!












Click it and Unblock the Notifications