சர்ச்சை பேச்சு: இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க.. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மக்களின் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஆ. ராசாவும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தின் போது ஆ.ராசா பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதன் காரணமாக ஆ ராசா பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக கடந்த 27-ம் தேதி புகார் அளித்தது.
தனிமனித விமர்சனம் என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் இது தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கத்தை இன்று மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்கத் தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.