சென்னையில் ஒரே நேரத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. சிக்கிய முக்கியமான டிஜிட்டல் ஆவணங்கள்?
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போக்குவரத்துத் துறை ஓய்வுபெற்ற துணை ஆணையர் தரணிதரன் வீடு மற்றும் தரணிதரனின் மனைவியின் ஆடிட்டர் அலுவலகம், திருவொற்றியூரில் உள்ள ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் முருகேசன் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது. இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை, எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தரணிதரன். இவர் போக்குவரத்துத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை முதல் தரணிதரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அவரது மனைவியின் ஆடிட்டர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல், சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தொழிலதிபர் முருகேசன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் இவருக்கும், இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொழிலதிபரான முழுகேசன், வசந்தம் என்ற பெயரில் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இதுதவிர அவரது மகன்கள் ராஜேஷ் மற்றும் அருண் ஆகியோர் ஷிப்பிங் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் தொடர்புடைய இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையில் நேரடியாகப் பங்கேற்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் நடந்து வந்த இந்தச் சோதனையில், வழக்கு தொடர்பாக ஆவணங்கள், வங்கி பாஸ் புத்தகங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெறுகிறது என்றும், இந்த ஆய்வு முடிந்த பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications