சட்டவிரோத பண பரிமாற்றம்: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை-நடந்தது என்ன?
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக கூரி அமலாக்கத்துறையும் களமிறங்கியதன் முக்கிய நடவடிக்கையாக இந்த ரெய்டு பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். 2015-ல் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான இந்த வழக்கு விசாரணையின் பூர்வோத்திரம் தொடங்குகிறது.

2015: போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பல்வேறு புகார்கள் எழுந்தன- இதனையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
2018: அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் பணி வாங்கித் தருவதாக அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பணம் பெற்று மோசடி செய்தார் செந்தில் பாலாஜி என புகார்கள் வரிசை கட்டின. இதனடிப்படையில் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மற்றும் நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் என வழக்குகள் பாய்ந்தன.
2018: வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் தமக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். சென்னை உயர்நீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் அளித்தது.
2018: செந்தில் பாலாஜி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மொத்தம் 14 பேர் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகாக்கள் பெயர்கள் இடம்பெறவில்லை என கூறி பாதிக்கப்பட்ட அருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மீண்டும் விசாரித்து 6 மாதத்துக்குள் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
2018: செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கு எம்பி எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதே காலகட்டத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி.
2021: பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம், தாம் கொடுத்த பணம் திரும்ப வந்துவிட்டதால் சமாதானமாக செல்வதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து 30.7.2021-ல் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
2021: செந்தில் பாலாஜி பண மோசடி செய்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. மேலும் அமலாக்கத்துறை தமக்கு எதிராக பிறப்பித்த சம்மனை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் செந்தில் பாலாஜி. இவ்வழக்கில் அமலாக்கப் பிரிவு சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீ டு செய்தது.
2023 மே: செந்தில் பாலாஜி/ அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில், செந்தில் பாலாஜி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும்; செந்தில் பாலாஜி மீதான பண மோசடி புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்; 2 மாதங்களுக்குள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
2023 ஜூன்: செந்தில் பாலாஜி தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இச்சோதனை பல நாட்கள் நடைபெற்றன.
2023 ஜூன் 13: செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகளில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி இருப்பதால் இது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications