பரபரப்பான அரசியல் சூழலில்! சென்னை வந்தார் ED இயக்குநர் ராகுல் நவீன்! பழைய கேஸ்களை தூசு தட்ட போகிறாரா
சென்னை: அமலாக்கத் துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீன் இன்று சென்னைக்கு வந்தடைந்துள்ளார். டெல்லியிலிருந்து 3 நாள் பயணமாக வருகை தந்த அவர், சென்னை மண்டல அலுவலகத்தில் முகாமிட்டு தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பல முக்கிய பணமாக்குதல் தடுப்புச் சட்டம் வழக்குகளை ஆய்வு செய்ய உள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு கவுகாத்தியில் அமலாக்கத் துறையின் 34 ஆவது மாநாடு நடந்தது. அதில் அமலாக்கத் துறை வழக்குகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அமலாக்கத் துறை தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல் உள்ளிட்ட பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அமலாக்கத் துறையில் ஒரு வழக்கிற்கு 4 முதல் 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அமலாக்கத் துறையின் மிக முக்கிய வழக்குகளை விசாரணை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
சென்னை வந்துள்ள ராகுல் நவீன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவார். விசாரணை முன்னேற்றம், ஆதார சேகரிப்பு, வழக்குத் தொடர்வு உத்தி, பிற அமைப்புகளுடனான ஒருங்கிணைப்பு ஆகியவை இதில் முக்கியமாக விவாதிக்கப்படும்.
தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என தெரிகிறது. அமலாக்கத் துறை இயக்குநர் ராகுலின் சென்னை வருகை தமிழ்நாட்டில் 2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
சில அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களைத் தொடர்புபடுத்திய வழக்குகள் உட்பட பல சர்ச்சைக்குரிய விசாரணைகள் இங்கு நடைபெற்று வருகின்றன. உதாரணமாக, தமிழக அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோருடன் தொடர்புடைய சில வழக்குகள் இதில் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமலாக்கத் துறை சென்னை மண்டல அலுவலகம், தமிழ்நாட்டில் பல்வேறு ஊழல், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகளை தீவிரமாக கையாண்டு வருகிறது. ராகுல் நவீன் இந்த பயணத்தின் முடிவில், வழக்குகளின் வேகத்தை அதிகரிக்கவும், சாட்சியங்களை வலுப்படுத்தவும், நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேஎன் நேரு மீதான வழக்கு என்ன?
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நியமனங்களுக்கு லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படிம் தமிழக டி.ஜி.பிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு முன்பு இன்பதுரை தரப்பு வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது, நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை என முறையிட்டார்.
இதனை கேட்ட நீதிபதிகள், வழக்குப் பதியும்படி உத்தரவு பிறப்பித்து, இரண்டு, மூன்று நாட்கள் தானே ஆகிறது. அதற்குள் நாங்கள் என்ன செய்ய முடியும்? என்றும் இன்பதுரையின் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அது போல் மேலும் தமிழக அரசியல்வாதிகள் சிலர் மீது குறிப்பிட்ட வழக்குகளில் குற்றபத்திரிகை தாக்கல் செய்வது குறித்தும் ராகுல் நவீன் வருகையில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications