கதிர் ஆனந்த் கல்லூரி சர்வர் ரூம் சாவியையே தரல.. “ரெய்டு” நடத்திய அமலாக்கத்துறை பரபர குற்றச்சாட்டு!
சென்னை: திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில், அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியபோது, சர்வர் ரூம் சாவிகளை வழங்கவில்லை என்றும், கார்பெண்டரை வைத்து தான் அறைகள் திறக்கப்பட்டன என்றும் அதனால் தான் சர்வர் ரூமுக்கு சீல் வைத்தோம் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகனும், வேலூர் தொகுதி எம்.பியுமான கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை தொடங்கியது. மூன்றாவது நாளாக ஜனவரி 5 ஆம் தேதியுடன், 44 மணி நேர சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். அப்போது, சர்வர் அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டுச் சென்றனர்.

கதிர் ஆனந்த் கல்லூரியில் ED ரெய்டு
கதிர் ஆனந்தின் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான பணத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பணம் எண்ணும் இயந்திரத்துடன் வந்து பணத்தை எண்ணி, வேனில் வைத்து வங்கி கிளைக்கு கொண்டு சென்று அமலாக்கத்துறையின் கணக்கில் வரவு வைத்தனர்.
இதையடுத்து, அதிரடியாக மீண்டும் ஜனவரி 7 ஆம் தேதி கிங்ஸ்டன் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஒரே ஒரு காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். முந்தைய ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, மீண்டும் சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது.
சர்வர் அறைக்கு சீல்
இந்நிலையில், கிங்ஸ்டன் கல்லூரி சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி கிங்ஸ்டன் கல்லூரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறையின் சோதனைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
கல்லூரியின் சர்வர் ரூம் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரியில் உள்ள கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை செயல்பட முடியாததால் கல்லூரியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முடங்கி உள்ளதாகவும், தேர்வுகள் நடந்து வரும் சூழலில் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
கதிர் ஆனந்த் தரப்பு மனு
இன்று மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கிங்ஸ்டன் கல்லூரி நிர்வாகம் சார்பில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கல்லூரியில் 1,400 மாணவர்கள் படிப்பதாகவும், கல்லூரியின் சர்வர் அறை சீல் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வு நடத்துவதில் சிக்கல்கள் உள்ளதாகவும் கல்லூரி விடுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாத நிலை உள்ளதாகவும் இது மாணவர்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை வாதம்
அதற்கு அமலாக்கத்துறை உடனடியாக பதில் வாதம் வைத்துள்ளது. ED சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், கிங்ஸ்டன் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனைக்கு சென்ற போது ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை எனவும், சர்வர் அறையின் சாவியை கூட கல்லூரி நிர்வாகம் கொடுக்கவில்லை எனவும் கார்பெண்டர் உதவியுடன் தான் அறைகள் திறக்கப்பட்டன என்றும் வாதங்களை அடுக்கினார்.
சர்வர் அறைக்கு சீல் வைக்க காரணம்
அமலாக்கத்துறை சோதனையில், கிங்ஸ்டன் கல்லூரியில் இருந்து 2 கோடியே 50 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் சர்வர் ரூமில் இருந்த கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்ய ஒத்துழைக்காததால் தான் சர்வர் ரூம்க்கு சீல் வைக்கப்பட்டதாகவும், அந்த சீல் பின்னர் அகற்றப்பட்டு கணக்கு விவரம் சார்ந்த கம்ப்யூட்டர்களில் இருந்த ஹார்ட் டிஸ்க் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார்.
கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களிலும், கல்லூரியிலும் நடந்த ரெய்டு தொடர்பாகவும், அதில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு தொடர்பாகவும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வைத்த வாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications