நேத்து தெம்பா இருந்த மனுசன்.. திடீர்னு நெஞ்சு வலியா? செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை வாதம்
சென்னை: நள்ளிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை, அவர் நேற்று வரை நல்ல உடல் ஆரோக்கியத்துடனே இருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதை தொடர்ந்து நள்ளிரவு அவர் கைது செய்யப்பட்டார். கைதின்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று காலை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். வழக்கு விசாரணையும் அங்கேயே நடந்தது. அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞரும் திமுக எம்பியுமான என்.ஆர்.இளங்கோவன், இடைக்கால ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அமலாக்கத்துறை விசாரணை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மனித உரிமை மீறலில் அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
சட்ட விரோதமாக நள்ளிரவில் கைது செய்துள்ளனர் என்றும், செந்தில் பாலாஜியின் மனைவியிடம், உறவினர்களிடமும் கைது செய்தது குறித்து சட்டப்படி தெரியப்படுத்தாமல் இருந்ததாகவும் குற்றம்சாட்டினார். கைதுக்கு முன் எந்த நோட்டிசும் வழங்கப்படவில்லை என்று கூறிய என்.ஆர்.இளங்கோவன், கைதுக்கான காரணத்தை செந்தில் பாலாஜியிடமே தெரிவிக்கவில்லை என்றார்.
இந்த வழக்கில் வாதிட்ட அமலாக்கத்துறை வழக்கறிஞர், செந்தில் பாலாஜியின் உடல் நிலை தொடர்பான கருத்துக்களை தெரிவித்து உள்ளது. "கைது செய்யப்படுவோம் என்று முன்கூட்டியே தெரிந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கான மெமோவை வாங்க மறுத்தார். கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை.
ரிமாண்ட்டை நீக்க கோரிக்கை வைக்க முடியாது, ஜாமீன்தான் கேட்க முடியும். செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சித்தோம். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் அனைத்து சட்ட விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு உள்ளன. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்ற விசாரணை சட்டங்களுக்குள் வராது.
செந்தில் பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும். நேற்று வரை ஆரோக்கியமாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக சொல்கிறார். செந்தில் பாலாஜிக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நாங்கள் அதற்கு அவசியம் இல்லை என்று கூறுகிறோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்றல் கூடாது." என்று தெரிவித்து உள்ளது.
அதே நேரம் செந்தில் பாலாஜிக்கு வீட்டிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள்தான் ஆம்புலன்சை அழைக்காமல் காரில் ஏற்று மருத்துவமனையில் கொண்டு வந்து அனுமதித்து அங்கும் துணை ராணுவ பாதுகாப்பை போட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பளிப்பதாக கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications