கரூர் சொகுசு பங்களா.. மருமகனும் மகளும் ஆஜராகவில்லை! செந்தில் பாலாஜியின் தம்பி மாமியாருக்கு ED சம்மன்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியின் மாமியாருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்ததன் பேரில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து செந்தில் பாலாஜி கடந்த 7ஆம் தேதி இரவு புழல் சிறையில் சில வழிமுறைகளை செய்த பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அன்று இரவு அவரிடம் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து அவரிடம் அடுத்த நாள் காலை முதல் கேள்விகள் கேட்கப்பட்டன. செந்தில் பாலாஜியிடம் தினமும் 50 கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. கரூரில் அவருடைய தம்பி கட்டி வரும் சொகுசு பங்களா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜி, அவர் வீடு கட்டுவது குறித்து எனக்கு சொன்னதாக நினைவில் இல்லை என்றார்.
இந்த நிலையில் கரூர் - சேலம் சாலையில் கட்டப்பட்டு வரும் அந்த பிரம்மாண்ட வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த நிலம் மோசடியாக பெறப்பட்டது என்றும் கட்டுமான பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து கட்டப்படும் வீட்டின் ஆவணங்கள் குறித்து விசாரிக்க செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டிற்கு சென்றனர்.

அங்கு தம்பி மனைவி நிர்மலா வீட்டில் இல்லாததால் கரூர் பங்களாவின் ஆவணங்களுடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸை வீட்டில் ஒட்டிவைத்துவிட்டு வந்தனர். இந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. மேலும் ரூ 30 கோடி மதிப்புள்ள 2.49 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ 10 லட்சத்திற்கு வாங்கியதாக வந்த தகவலை அடுத்து அமலாக்கத் துறை அந்த பங்களாவை முடக்கியது.
முடக்கப்பட்ட நிலம், அசோக்குமாரின் மாமியார் லட்சுமியிடம் இருந்து தான் நிர்மலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் மாமியார் லட்சுமியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications