காவிரி விவகாரம்.. துணிச்சல்.. சட்டசபையில் பாய்ந்த எடப்பாடி பழனிச்சாமி.. கடைசியில் ஆதரவு
சென்னை: காவிரி விவகாரத்தில் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். காவிரி நதிநீர் விவகாரத்தில் அதிமுகவிற்கு இருந்த துணிச்சல் திமுகவிற்கு இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளுக்கு நீரைப் பெறுவதற்காக உடலை வருத்தி உண்ணாவிரதம் இருந்தார் ஜெயலலிதா என்று கூறினார்.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீதான விவாதம் சட்டசபையில் நடைபெற்றது. திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் தனித்தீர்மானம் குறித்த விவாதத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். தீர்மானம் முழுமையாக இல்லை என்று கூறி பாஜக எம்எல்ஏக்கள் வெளி நடப்பு செய்தனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டசபையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,காவிரி நீர் தொடர்பாக பலமுறை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நீரைப் பெறுவதற்காக உடலை வருத்தி உண்ணாவிரதம் இருந்தார் ஜெயலலிதா. நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது அதிமுக அரசு. காவிரி நதிநீர் விவகாரத்தில் அதிமுகவிற்கு இருந்த துணிச்சல் திமுகவிற்கு இல்லை என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.
நியாயமான நீரை கர்நாடக அரசு திறந்து விடாதது சரியல்ல என்பதை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். காவிரி விவகாரத்தில் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம். தமிழக பாஜக, காங்கிரஸ் தண்ணீர் திறக்க வேண்டும் என்கிறது; ஆனால் கர்நாடக பாஜக, காங்கிரஸ் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்கிறது. கர்நாடகாவைப் பொறுத்தவரை தேசிய கட்சிகள்தான் அங்கு ஆட்சி செய்து வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு முழு மனதோடு செயல்பட்டால்தான் நமக்கு நீர் கிடைக்கும் என்று என்று கூறினார். அதனை தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இறுதியில் காவிரி தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இறுதியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறினார். காவிரி நதிநீர் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications