கணிப்புகளை தகர்த்தெறிந்து... 3 ஆண்டுகாலத்தை நிறைவு செய்யும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: மூன்று மாதங்களில் அதிமுக ஆட்சி கவிழும் என ஆருடங்கள் கூறப்பட்ட நிலையில், அதனை தகர்த்தெறிந்து மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி மூன்று ஆண்டுகளில் தன்னை ஒரு சாணக்கியனாகவும் வளர்த்துக்கொண்டார்.
ஆட்சிக்கு கடும் நெருக்கடியும், இக்கட்டும் ஏற்பட்ட தருணத்தில் துளியும் யோசிக்காமல் தினகரனை ஒதுக்கிவிட்டு ஓ.பி.எஸ்.சுடன் கைகோர்த்தது, எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்தது, என பல உதாரணங்களை கூறலாம்.

முதல்வர் எடப்பாடி
தமிழக முதலமைச்சராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்று வரும் பிப்ரவரி மாதத்துடன் மூன்றாண்டு காலம் நிறைவடைகிறது. 3 மாதமோ, நான்கு மாதமோ தான் அதிமுக ஆட்சி இருக்கும் என அப்போது ஆருடங்கள் கூறப்பட்டன. ஆனால், தனது கெட்டிக்காரத்தனமான செயல்பாட்டால் கணிப்புகளையும், ஆருடங்களையும் தூள் தூளாக்கி மூன்றாண்டு காலத்தை நிறைவு செய்கிறார்.

தக்கவைப்பு
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தனது ராஜதந்திரத்தால் தன் வசப்படுத்தியது, ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுடன் கைகோர்த்தது, வலுவான கூட்டணி அமைத்தது, டெல்லி அரசியலை லாவகமாக கையாள்வது என பல விவகாரங்களிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டார்.

பதில்கள்
அதேபோல் முதலமைச்சராக பதவியேற்ற புதிதில் செய்தியாளர்களை சந்திக்கிற போது ஒரு வித பதற்றத்துடன் பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இப்போது நின்று, நிதானமாக, தெளிவாக பதில்களை டான் டான் என்று கூறுகிறார். மேலும், சிக்கலான பல கேள்விகளையும் எளிதாக கையாள்கிறார்.

ஆலோசனை
மேலும், மூத்த ஐ.ஏ.எஸ், அதிகாரிகளுடன் நட்பு பாராட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளை புறம்தள்ளாமல் அதனை பரிசீலிக்கிறார். பல திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு அவர்களுடன் ஒரு முறை யோசனை கேட்கிறார். இதன்மூலம் பல அறிவிப்புகளை அவர் வெளியிடுகிறார். இதனிடையே இந்த மூன்றாண்டு கால ஆட்சியின் சிறப்புகளை கூற சாதனை மலர் ரெடியாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications