அடுத்தடுத்து ஆக்ஷன்.. இன்னொரு வழக்கிலும் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு- ஓபிஎஸ்ஸை விட்டுட்டு தனியா!
சென்னை : அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி ஆகியோருக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்துள்ளார்.
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்று வழக்கை பட்டியலிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீது நான்கு வாரங்களில் பதிலளிக்க ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமிக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வேண்டி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களுக்கு வழக்கு தொடர அனுமதி அளித்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.
அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் பிரதிநிதியாக அந்த மனுவை தாக்கல் செய்வதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதிமுக தொண்டர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் அவர்கள் இருவருக்கும் கிடையாது என ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் அப்போது கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் இந்த பதிலை ஏற்க மறுத்து, அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அவர்களுக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனியாக மேல் முறையீடு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications