ரவுடிகளுக்கு போலீஸ் மீது பயமில்லை..பெரம்பலூர் நாட்டு வெடிகுண்டு வீச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, பாலியல் வன்முறை, போதை பொருள் புழக்கம், அடிதடி என்று குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். பெரம்பலூர் சுங்க சாவடி அருகே காவல்துறை வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடி குண்டு வீசி தாக்கிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடி அருகே இன்று காலை ஒரு காவல்துறை வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசினார்கள். இதில் 4 போலீசார் காயமடைந்துள்ளனர். இது அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு
சம்பவ இடத்தில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வெள்ளை காளி என்கிற ரவுடியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. காவலர் காவலர்கள் பாதுகாப்பில் அழைத்து வந்தவர்களை பின் தொடர்ந்து வந்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த மர்ம கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் பிடித்துவிடுவோம்" என்றார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.
ரவுடிகளுக்கு போலீஸ் மீது பயமில்லை
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபடும் காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சர் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications