எடப்பாடி கையில் 2,505 பேரின் லெட்டர்.. ஓபிஎஸ்-க்கு எதிராக மாஸ்டர் மூவ்.. பொதுக்குழு நடந்தே தீருமாம்!
சென்னை : நாளை நடைபெறும் பொதுக்குழுவிற்கு ஆதரவாக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,505 பேரின் ஒப்புதல் கடிதங்களை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார்.
அ.தி.மு.கவில் 2,625 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில், அவர்களில் 2,505 உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதங்களை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுக்குழு கூட்டம் நடத்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் ஒப்புதல் கடிதங்களைப் பெற்றுள்ளது எடப்பாடி தரப்பு.

ஒப்புதல் அளிக்கவில்லை
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்களின் வரைவு நகல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டது. அதிமுக தீர்மானக்குழு தயார் செய்த தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார். இன்று நண்பகல் 12 மணிக்குள்ளாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியிருந்த நிலையில் தற்போது வரை ஓ.பன்னீர்செல்வம் வழங்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி கடிதம்
அசாதாரண சூழலில் பொதுக்குழுவை நடத்த வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நிலையில், பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி எழுதிய பதில் கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம். எந்த பிரச்னையாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக் கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவுக்கு அசாதாரண சூழல் நிலவவில்லை எனக் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒப்புதல் கடிதம்
இதற்கிடையே, பொதுக்குழுவில் பங்கேற்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,505 பேரின் ஒப்புதல் கடிதங்களை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார். அ.தி.மு.கவில் 2,625 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 120 பேரை தவிர 2505 பேரின் ஒப்புதல் கடிதங்களை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழுவை நடத்தவும், அதில் தவறாமல் கலந்து கொள்வோம் என உறுதி அளித்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனராம்.

மாஸ்டர் பிளான்
பொதுக்குழு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் காய்நகர்த்தி வரும் நிலையில், மொத்த பொதுக்குழு உறுப்பினர்களும், தனக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டும் வகையில், தனது ஆதரவாளர்கள் மூலம், மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்கள் தாங்கள் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக கையெழுத்திட்ட ஒப்புதல் கடிதத்தைப் பெற்றுள்ளார். இது பொதுக்குழுவை முடக்க நினைத்த ஓ.பி.எஸ்ஸின் அத்தனை திட்டத்தையும் நொறுக்கிவிட்டது என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications