9 மாவட்ட நிர்வாகிகள்.. "சோலோ" மீட்டிங் போட்ட இபிஎஸ்.. பரபரக்கும் ராயப்பேட்டை.. அதிமுகவில் சூறாவளி!
சென்னை: அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திடீர் மீட்டிங் நடத்தி வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவு வந்ததில் இருந்தே அதிமுகவில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக அதிமுக கட்சியின் தோல்விக்கு பின் கட்சி இரண்டு குழுவாக பிரிந்து மோதிக்கொண்டு இருக்கிறது.
ஓபிஎஸ் ஆதரவு, இபிஎஸ் ஆதரவு என்று இரண்டு தரப்பாக நிர்வாகிகள் மோதிக்கொண்டு இருக்கிறார்கள். அதிலும் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

எதிர்கட்சித் தலைவர்
எதிர்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என்று ஒரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக கோரிக்கை வைத்தார். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் எங்கெல்லாம் வென்றதோ அங்கெல்லாம் வெற்றிக்கு உதவியதே நான்தான், எனக்குத்தான் எதிர்கட்சித் தலைவர் பதவி என்று கூறினார். இதனால் இரண்டு தரப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.

மோதல்
தொடர் மோதல்களுக்கு பின் ஓபிஎஸ் விருப்பமே இன்றி, எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தார். ஆனாலும் கட்சியில் எம்எல்ஏக்கள் இடையிலும், நிர்வாகிகள் இடையிலும் கடும் பிரிவினை நிலவியே வந்தது. முக்கியமாக ஓபிஎஸ் ஒரு பக்கம் தனியாக அறிக்கை வெளியிட்டு வந்தார். இபிஎஸ்ஸும் போட்டிக்கு தனியாக அறிக்கையை விட்டுக்கொண்டு இருந்தார்.

சசிகலா
இதை பயன்படுத்திக்கொண்டு தற்போது சசிகலாவும் வேகமாக காய் நகர்த்தி வருகிறார். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், தற்போது அரசியலுக்குள் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் முடிவில் சசிகலா இருக்கிறார். தினம் ஒரு ஆடியோ வெளியாக.. அரசியல் களத்திலும், அதிமுகவிற்குள்ளும் சசிகலா பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார். கட்சியை விரைவில் மீட்க போகிறேன் என்றும் அறிவித்துள்ளார்.

மீட்பு
இந்த நிலையில்தான் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் மீட்டிங் நடத்தி வருகிறார். மொத்தமாக 9 நிர்வாகிகள் உடன் மீட்டிங் போட்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் ராயப்பேட்டையில் மீட்டிங் நடக்கிறது. இதில் 9 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். நேரடி அழைப்பு வெளிப்படையாக செல்லாமல், தனி தனி அழைப்பு சென்றுள்ளது.

ஓபிஎஸ்
இதில் ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை. சசிகலா ஒரு பக்கம் கட்சியை மீட்பேன் என்று கூறி வருகிறார். இன்னொரு பக்கம் ஓபிஎஸ்முரண்டு பிடிக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த சோலோ மீட்டிங் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு திரட்டி வருகிறார்.. இனிமேல்தான் அதிமுகவில் சூறாவளி வீச போகிறது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications