ஊழலையும் பண்ணிட்டு இப்படி சொல்றாரே.. பார்த்துக்கிட்டு இருக்கீங்க.. கோர்த்துவிடும் ஓபிஎஸ் ஆதரவாளர்!
சென்னை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகளை சரிவர அமைக்காமல் கொள்ளையடித்துவிட்டு, இன்று அவரே மழைநீர் தேங்கியுள்ளது என எடப்பாடி புகார் வாசிக்கிறார். முறைகேட்டில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளைப் பார்வையிட்டு, ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, கொள்ளை அடித்தவரே கேள்வி கேட்கிறார், திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என விமர்சித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் சென்னையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் பணிகள் செய்ததாக எடப்பாடி பழனிசாமி சொன்னாரே எங்கே?சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி விசிட்
சென்னை புறநகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் ஒரு சொட்டு மழைநீர் கூட தேங்கவில்லை என்று திமுக அரசு சொல்லிவருகிறது. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மூலம் வெள்ளநீர் முழுவதும் வடிந்துவிட்டதாக தவறான செய்தியை அரசு தெரிவித்து வருகிறது. வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்திருப்பதால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள். படகு மூலமாகத்தான் வீடுகளுக்கு சென்று வருகிறார்கள், அமைச்சர்கள் இங்கே வந்து பாருங்கள் என விமர்சித்தார்.

எடப்பாடி ஆட்சியில்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில், ரூ.1000 கோடி செலவு செய்து மழைநீர் வடிகால் பணிகள் முடுக்கி விடப்பட்டது எனவும், இனி சென்னையில் மழை நீர் தேங்காது எனவும் கடந்த தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அவரே தற்போது மழை நீர் தேங்கியுள்ளதாக விமர்சனம் செய்வது நியாயமா? என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நியாயமா?
இதுதொடர்பாக தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள புகழேந்தி, சென்னைக்கு 954 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைத்து தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அப்போது அவர் இனி சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறினார். ஆனால் தற்போது பெய்து வரும் மழையால் சென்னையில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், எம்.எல்.ஏக்களும் முறைகேடு செய்துள்ளனர் என்று புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நடவடிக்கை எடுக்கலாமே
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கி, முறைகேடு செய்துவிட்டு, மழைநீர் வடிகாலை சரிவர அமைக்காமல் இருந்துவிட்டு, இப்போது, மழைநீர் வடியவில்லை என எடப்பாடி பழனிசாமியே வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பேசுவது கூத்தாக இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறிய முதல்வர் ஸ்டாலின் இன்னும் ஏன் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கவில்லை?

அமைச்சர்களை அழைக்கிறார்
மழைநீர் வடிகால் அமைக்காமலேயே, கடந்த ஆட்சியில் அமைத்ததாக கூறிவிட்டு, இப்போது மழைநீர் தேங்கியுள்ளது என எடப்பாடி பழனிசாமி சொன்னதும், அமைச்சர்களும் அடுத்த நாளே சென்று அங்கு பார்வையிடுகிறார்கள். ஊழலில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி மீது முதலில் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமர்சித்துள்ளார் புகழேந்தி.












Click it and Unblock the Notifications